குடியரசு துணைத் தலைவர்.. யாருக்கும் ஆதரவில்லை.. திரிணாமுல் காங்கிரஸ் திடீர் அறிவிப்பு!
கொல்கத்தா: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவின் பதவிகாலமும் அடுத்த மாதத்துடன் முடிவடைய இருப்பதால் வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
வேட்பாளர்கள் யார்?
ஜூலை 6 ஆம் தேதி தொடங்கிய குடியரசுத் துணைத் தலைவருக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூலை 19 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜெக்தீப் தன்கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதேபோல்காங்கிரஸ் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக கர்நாடகாவைச் சேர்ந்த மார்கரெட் ஆல்வா வேட்பாளராக அறிவித்தார்.
திரிணாமுல் காங். அறிவிப்பு
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் கிட்டத்தட்ட பாஜகவின் வெற்றி உறுதியாகி உள்ளது. இருந்தும் எதிர்க்கட்சிகள் சார்பாக பாஜகவுக்கு எதிராக வேட்பாளர் நிறுத்த வேண்டும் என்ற முனைப்போடு வேட்பாளரை அறிவித்துள்ளது. இந்த சூழலில், எதிர்க்கட்சிகள் கூட்டணியில் இருந்து திடீரென அதிருப்தி காரணமாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விலகுவதாக அறிவித்துள்ளது. குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க மாட்டார்கள். யாருக்கும் ஆதரவில்லை என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
ஏன் திடீர் முடிவு?
2024ம் தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் மட்டுமே இருக்கும் நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தல் மூலம் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இருப்பதாக பேசப்பட்டு வந்தது. குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்விலும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி முன்னணியில் இருந்து வேட்பாளர் தேர்வில் ஈடுபட்டார். அப்போது பல்வேறு சிரமங்களையும் சந்திக்க வேண்டி இருந்தது. ஆனால் குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில், தன்னிடம் ஆலோசிக்காமல் முடிவு எடுக்கப்பட்டதால், மம்தா பானர்ஜி அதிருப்தி காரணமாக வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது.
யாருக்கு வெற்றி வாய்ப்பு?
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பி-க்கள் மற்றும் நியமன எம்.பிக்கள் வாக்களிப்பார்கள். மொத்தமுள்ள 775 எம்பி-க்களில் 388 எம்பி-க்கள் வாக்களித்தால் குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க முடியும். பாஜக கூட்டணி வசம் 395 எம்.பிக்கள் இருப்பதால், பாஜக வேட்பாளரின் வெற்றி உறுதியாகி உள்ளது.