நீங்க 'ஊதுவதெல்லாம்' ஒரிஜினல் இல்லை.. 'குடிக்கிறதெல்லாம்' நிஜம் இல்லை...
டெல்லி: போலி சிகரெட் மற்றும் மது விற்பனையில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக அதிர்ச்சிகரமான ஆராய்ச்சி முடிவு வெளியாகியுள்ளது.
இந்திய தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பான ஃபிக்கி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது.
போலி சிகரெட் - மது
இந்திய பொருளாதாரத்தை அழிக்கும் கடத்தல் மற்றும் போலி பொருட்கள் உற்பத்தி குறித்து மதுபானம், வாகன உதிரி பாகங்கள், கணினி மென்பொருள், பாக்கெட்டில் அடைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள், செல்போன், சிகரெட் உள்ளிட்ட 7 துறைகளில் ஃபிக்கி குழு ஆய்வு மேற்கொண்டது.
20 சதவீதம் போலி
இதில் தமிழகத்தில் விற்பனையாகும் சிகரெட்டுகளில் 20 சதவீதம் போலியானவை என்று அந்தக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடத்தலில் சென்னை முதலிடம்
மேலும் வெளிநாடுகளில் இருந்து போலி சிகரெட்டுகளை கடத்தி மற்ற மாநிலங்களுக்கு விநியோகிப்பதில் சென்னை நகரம் முதலிடத்தில் உள்ளதாக அதிர்ச்சிகரமான தகவலை ஃபிக்கி தெரிவித்துள்ளது.
வரி இழப்பு
போலி சிகரெட் விற்பனை அதிகரித்துள்ளதன் காரணமாக மாநிலத்திற்கு 50 சதவீத மதிப்புக்கூட்டுவரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றில் பறக்கும் விதிகள்
போலி சிகரெட்டுகளில் எச்சரிக்கை வாசகங்கள், விலை ஆகியவை அச்சிடப்படாமல் அரசின் விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்போன்களிலும் போலி
மதுபானங்கள் மற்றும் செல்போன்களிலும் போலிகள் பெருமளவில் புழக்கத்தில் உள்ளதாகவும், இதன் மூலமும் மத்திய, மாநில அரசுகளுக்கு பெருமளவு இழப்பு ஏற்பட்டள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
போலி பொருட்கள்
போலி பொருட்கள் உலா வருவதன் காரணமாக, 2013&14 ஆண்டில் மட்டும் ஏற்பட்ட இழப்பு 1 லட்சத்து 5 ஆயிரத்து 381 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.