சுப்ரீம் கோர்ட்டில் ஜெ. சார்பில் பாலி நாரிமன் ஆஜராக கூடாது-தலைமை நீதிபதிக்கு டிராபிக் ராமசாமி கடிதம்
டெல்லி: ஜெயலலிதா ஜாமீன் மனு மீது மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் வாதிடக்கூடாது என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகத்தில் ஒரு கடிதம் அளித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு கடந்த 7ம்தேதி கர்நாடக ஹைகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் ஜாமீன் கேட்டு ஜெயலலிதா தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் வெள்ளிக்கிழமை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
ஏற்கனவே கடந்த திங்கள்கிழமை ஜாமீன் மனுவை ஏற்பதா, நிராகரிப்பதா என்பது குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்து தலைமையிலான பெஞ்ச் பரிசீலனை செய்தபோது, ஜெயலலிதா சார்பில் மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் ஆஜராகினார்.
இந்நிலையில், நாரிமனை ஜெயலலிதா சார்பில் வழக்காட அனுமதிக்க கூடாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு தமிழகத்தின் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில், நாரிமனின் மகன் ரோஹிண்டன் நாரிமன், உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.
மேலும் கர்நாடகா ஹைகோர்ட்டில் நீதிபதி சந்திரசேகரா, ஜெயலலிதாவுக்கு ஜாமீன் நிராகரித்த தீர்ப்பில் மனோஜ் நரூலா என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ரோஹிண்டன் பாலி நாரிமன் முன்னிலையான அமர்வில் வழங்கப்பட்ட தீர்ப்பை மேற்கோள் காட்டியிருக்கிறார்.
எனவே, இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்தால் அந்த தீர்ப்பு விமர்சனத்துக்கு உள்ளாகும் வாய்ப்புள்ளது. எனவே, பாலி நாரிமன், ஜெயலலிதாவுக்காக வாதிட தடை விதிக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.