மே வங்கத்தில் 3 தொகுதிகளை.. அப்படியே தட்டி தூக்கிய திரிணாமுல்.. மிக பெரிய தோல்வியை எதிர்நோக்கி பாஜக
கொல்கத்தா: மேற்கு வங்க இடைத்தேர்தலில் பவானிபூர் தொகுதியில் மம்தா முன்னிலையில் உள்ள நிலையில், சாம்சர்கஞ்ச் மற்றும் ஜங்கிபூர் ஆகிய தொகுதிகளிலும் திரிணாமுல் வேட்பாளர்களே முன்னிலையில் உள்ளனர்.
Recommended Video
மேற்கு வங்கத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் எட்டு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பில் பாஜக களமிறங்கியது.
தொகுதி மேம்பாட்டு நிதி 3-வது ஆண்டாக கட்...மக்களுக்கு எதுவுமே செய்ய முடியலையே... குமுறும் எம்.பிக்கள்
இதற்காகப் பிரதமர் மோடி தொடங்கி அமித் ஷா, ராஜ்நாத் சிங் என அனைத்து முக்கிய மத்திய அமைச்சர்களும் மேற்கு வங்கத்திலேயே முகாமிட்டனர். இருந்தாலும் கூட பாஜகவால் அங்கு வெல்ல முடியவில்லை.
இடைத்தேர்தல்
திரிணாமுல் காங்கிரஸ் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதல்வராக 3ஆவது முறையாகப் பொறுப்பேற்றார். ஆனால், அதேநேரம் மம்தா நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரிக்கு எதிராகத் தோல்வியடைந்தாக அறிவிக்கப்பட்டார். முதல்வரான 6 மாதத்திற்குள் எம்எல்ஏ-ஆக வேண்டும். இதனால் பவானிபூர் தொகுதியில் வென்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் ராஜினாமா செய்தார். அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.
திரிணாமுல் முன்னிலை
அதேபோல சாம்சர்கஞ்ச் மற்றும் ஜங்கிபூர் ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கையும் இன்று நடைபெற்று வருகிறது. பவானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி முன்னிலையில் உள்ளார். அதேபோல சாம்சர்கஞ்ச் மற்றும் ஜங்கிபூர் ஆகிய தொகுதிகளிலும் திரிணாமுல் வேட்பாளர்களே முன்னிலையில் உள்ளனர். ஜங்கிபூர் இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஜாகிர் ஹொசைன் 45 ஆயிரம் வாக்குகளுடன் முதல் இடத்தில் உள்ளார். பாஜகவின் சுஜித் தாஸ் 28 ஆயிரம் வாக்காளர்களுடன் 2ஆவது இடத்தில் உள்ளார். அதேபோல சாம்சர்கஞ்ச் தொகுதியிலும் திரிணாமுல் வேட்பாளர் அமீருல் இஸ்லாம், காங்கிரஸ் வேட்பாளரைக் காட்டிலும் முன்னிலையில் உள்ளார்.
இடைத்தேர்தல் ஏன்
கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி சாம்சர்கஞ்ச் தொகுதியில் சட்டசபைத் தேர்தல் நடக்க இருந்தது. அப்போது வாக்குப்பதிவுக்கு சில நாட்கள் முன்னிலையில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ரெசால் ஹக் கொரோனாவால் உயிரிழந்தார். இதையடுத்து அங்கு வாக்குப்பதிவு ரத்து செய்யப்பட்டது. அதேபோல ஜங்கிபூர் தொகுதியில் போட்டியிட இருந்த வேட்பாளர் ஒருவரும் மரணமடைந்ததால், அந்த தொகுதியின் வாக்குப்பதிவும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மம்தா பானர்ஜி
இந்த வெற்றியின் மூலம் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸின் பலம் நிரூபணம் ஆகியுள்ளது. இடைத்தேர்தலில் திரிணாமுல் வேட்பாளர்களின் வெற்றி பெறுவது கிட்ட தட்ட உறுதியாகியுள்ள நிலையில், அக்கட்சியின் தொண்டர்கள் வெற்றி கொண்டாடத்தை ஆரம்பித்துவிட்டனர். இந்த வெற்றியின் மூலம் மம்தா, அடுத்த 5 ஆண்டுகளுக்கு எவ்வித சிக்கலும் இல்லாமல் ஆட்சி நடத்த முடியும். கடந்த 2011ஆம் ஆண்டு முதல் மம்தா பவானிபூர் தொகுதியில் இருந்து எம்எல்ஏ-ஆக உள்ளார்.