முஸ்லீம்களின் "முத்தலாக்" விவாகரத்து.. மத்திய அரசின் கருத்தைக் கேட்கிறது சுப்ரீம் கோர்ட்!
டெல்லி: மூன்று தலாக் சொல்லி திருமண உறவை முறித்துக்கொள்ளும், நடைமுறைக்கு தடை விதிக்க கோரி முஸ்லிம் பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில், பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இஷ்ரத் ஜகான் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மூன்று முறை தலாக் என கூறி மனைவியை கணவன் விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு, இஸ்லாமிய சட்டம் அனுமதிக்கிறது.
முஸ்லிம் தனிநபர் சட்டம்-1937 (ஷரியத்), பிரிவு-2ல் இதற்கு அனுமதியுள்ளது. இந்த அனுமதி பெண்களின் அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளது. இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 14ன்கீழ் கொடுக்கப்பட்டுள்ள, உரிமை மீறப்படுகிறது. எனவே தலாக் நடைமுறையை நீக்க வேண்டும் என்று அந்த பெண்மணி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்த விசாரணையின்போது அனைத்திந்திய முஸ்லிம் சட்ட வாரியத்திடம் கருத்து கேட்டிருந்தது சுப்ரீம் கோர்ட். இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய சுப்ரீம் கோர்ட், இதுகுறித்து கருத்தை தெரிவிக்க கேட்டுக்கொண்டுள்ளது.
அனைத்திந்திய முஸ்லிம் பெண்கள் சட்ட வாரியம், மூன்று தலாக் நடைமுறையை நீக்க விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.