ஆந்திராவில் ரூ.10 கோடி லஞ்சம் கேட்ட டிவி தொகுப்பாளர் கைது
ஹைதராபாத்: ஆந்திராவில் பல் மருத்துவக்கல்லூரிக்கு மிரட்டல் விடுத்து பத்து கோடி லஞ்சம் கேட்ட டிவி கிரைம் நிகழ்ச்சித் தொகுப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள எலுரு நகரத்தில் உள்ளது செயின்ட் ஜோசப் பல் மருத்துவக் கல்லூரி. இந்த கல்லூரியைப் பற்றியும், நிர்வாகத்தில் நடைபெறும் குளறுபடியைப் பற்றியும் செய்தி வெளியிடப்போவதாக க்ரைம் டிவி நிகழ்ச்சிச் தொகுப்பாளர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதற்கு பத்துகோடி ரூபாய் லஞ்சம் கேட்ட அவர், கல்லூரி முதல்வர் பாலாவிடம் சனிக்கிழமையன்று ரூபாய் ஒரு கோடி அட்வான்ஸ் பெற்றுள்ளார்.
மீதமுள்ள பணம் 9 கோடி ரூபாயை தராவிட்டால் உடனடியாக நிகழ்ச்சியை டிவியில் ஒளிபரப்பு செய்து விடுவதாகவும் அந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனையடுத்து கல்லூரி முதல்வர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கவே விஜயவாடா அருகே நள்ளிரவில் டிவி தொகுப்பாளரையும், அவருடன் இருந்த நான்கு பேரையும் பிடித்தனர். ஞாயிறன்று எலுரு கொண்டு வந்த போலீசார் விசாரணைக்குப் பின்னர் கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையில் கடந்த ஒருவாரகாலமாக பல் மருத்துவக்கல்லூரி நிர்வாகத்தினரை டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் மிரட்டல் விடுத்து வந்தது தெரியவந்தது. மிரட்டல் விடுத்தவரின் பெயர் ஹர்சவர்த்தன் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வைத்திருந்த 2 கார்கள், 5 மொபைல் போன்கள், ரூ.37,450 ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.