இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் ஆணையம் நாளை விசாரணை
இரட்டை இலை சின்னத்திற்கு ஆள் ஆளுக்கு மல்லுக்கட்டி வரும் நிலையில் நாளை அக்டோபர் 6 ஆம் இது குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்துகிறது.
டெல்லி: இரட்டை இலை சின்ன விவகாரம் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் நாளை விசாரணை நடத்துகிறது.
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அதிமுக இரு அணிகளாக பிளவு பட்டன. ஆர். கே. நகர் இடைத்தேர்தலின் போது
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி ஓபிஎஸ், சசிகலா அணிகள் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டன.
இதையடுத்து ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது இரட்டை இலை சின்னம், அதிமுக பெயர், கட்சி கொடி ஆகியவை முடக்கப்பட்டன.
தொப்பி, இரட்டை மின் கம்பம்
சசிகலா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரன் தொப்பி சின்னத்திலும், ஓ.பி.எஸ். அணி வேட்பாளர் மதுசூதனன் இரட்டை மின் விளக்கு சின்னத்திலும் போட்டியிட்டனர். ஆனால் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
தீபாவும் சின்னத்திற்கு போட்டி
2 அணிகளும் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு தேர்தல் ஆணையத்தில் தனித்தனியாக முறையிட்டன. இவர்களோடு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு போட்டி போட்டு களம் இறங்கினார்.
ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிகள்
இந்த நிலையில் சசிகலா அணியில் இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்த அணியின் துணை பொதுச்செயலாளரான தினகரனை ஓரங்கட்டிவிட்டு ஓ.பன்னீர்செல்வத்தோடு கை கோர்த்தார். இதனால் காட்சிகள் மாறியது. ஒன்றாக இணைந்த எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் ஆகியோர் பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, முக்கிய தீர்மானங்களையும் நிறைவேற்றினர்.
தேர்தல் ஆணையத்திடம் கடிதம்
இந்த தீர்மானங்களுடன் எடப்பாடி-ஓ.பி.எஸ். அணியினர் ஒன்றாக சேர்ந்து தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர். அதில் அ.தி.மு.க. அணிகள் ஒன்றுபட்டு விட்டதாகவும் எனவே இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
அவகாசம் கேட்ட தினகரன்
இதேபோல் தினகரன் அணி சார்பில் பிரமாண பத்திரங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளனர். ஆவணங்கள் தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கேட்ட தினகரனின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து தினகரன் ஹைகோர்ட் கிளை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
சின்னம் யாருக்கு என வழக்கு
மேலும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்கும் தொடரப்பட்டன. இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அக்டோபர் 31ஆம் தேதிக்குள் முடிவெடுக்கமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆவணங்கள் தாக்கல் செய்ய ஆணை
இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதில், கடந்த ஆண்டு டிசம்பர் 6-5ல் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களாக இருந்தவர்கள் பட்டியலைத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும், செப்டம்பர் 29ஆம் தேதிக்குள் இரட்டை இலை சின்னம் தொடர்பான கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
நாளை தேர்தல் ஆணையம் விசாரணை
அனைவரும் அக்டோபர் 6ஆம் தேதி தேர்தல் ஆணையத்திடம் நேரில் ஆஜராக வேண்டும். அக்டோபர் 6ஆம் தேதியன்று இரட்டை இலை சின்னம் தொடர்பாக இறுதி விசாரணை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து எடப்பாடி, ஓபிஎஸ் அணி சார்பில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அனைவரும் டெல்லி பயணம்
இரட்டை இலை சின்னம் யாருக்கு சொந்தம்? என்பது பற்றிய இறுதி விசாரணை டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் நாளை நடைபெற உள்ளதை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி, தினகரன், தீபா அணியினர் இன்று டெல்லி பயணமாகிறார்கள். நாளை 3 அணியினரும் தேர்தல் ஆணையத்தில் ஆஜராக உள்ளனர்.
யார் தரப்புக்கு யார் ஆஜர்?
இந்த வழக்கில், எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் சார்பாக மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராகவுள்ளார். டிடிவி தினகரன் சார்பில் அபிஷேக் மனுசிங்வி ஆஜராகிறார். தீபா அணி சார்பில் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் ஆஜராகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை மதியம், 3 மணிக்கு விசாரணை ஆரம்பிக்க உள்ளது.