துப்பாக்கிச் சூடு, வெட்டு, குத்து கொலைகள்.. பாஜக-திரிணாமுல் காங்கிரஸ் மோதலால் மே.வங்கத்தில் பதற்றம்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில், கடந்த இரு நாட்களில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரு தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலைச் சம்பவங்களில், பாஜகவுக்கு தொடர்பு இருப்பதாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. நடைபெற்று முடிந்த, லோக்சபா தேர்தலில், மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக அபார முன்னேற்றம் கண்டது.
அந்த கட்சி மொத்தம் 18 தொகுதிகளில் வென்றது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, 22 தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. தேர்தல் பிரச்சார காலகட்டங்களில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான, மமதா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, மற்றும் பாஜக தலைவர் அமித்ஷாவை கடுமையாகத் தாக்கி பொதுக்கூட்டங்களில் பேசினார்.
அதேபோன்று மோடியும், அமித் ஷாவும், மமதா பானர்ஜியை தாக்கிப் பேசினர். மேலும், இரு கட்சி தொண்டர்கள் நடுவே ஆங்காங்கே, மோதல் சம்பவங்கள் வெடித்தன. வாக்குபதிவு தினங்களில் கூட, பெரும் அடிதடி ரகளை அரங்கேறியது.
இந்த நிலையில், தேர்தல் வன்முறைகளில் பாஜக தொண்டர்களை, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கொலை செய்ததாக அமித்ஷா குற்றம் சாட்டி வருகிறார்.
மேற்குவங்கத்தில் கொலையான பாஜக நிர்வாகிகளின் குடும்பத்தினரை, மோடியின் பதவியேற்பு விழாவுக்கு டெல்லிக்கே பாஜக அழைத்து சென்று சிறப்பித்தது.
இந்த நிலையில், கடந்த இரு தினங்களாக, மேற்கு வங்க மாநிலத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் இருவர் பாஜகவினரால் கொல்லப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை, மேற்கு வங்க மாநிலத்தின், வடக்கு 24 பர்கானாஸ் பகுதியில், பொதுமக்கள் முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் பைக்கில் வந்த மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நிர்மல் குண்டு என்பவர் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியான தொண்டர் என்று அடையாளம் காணப்பட்டது.
சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் காவல்துறையினர், கொலையாளிகளான, சுமன் குண்டு மற்றும் சுஜய் தாஸ் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்கள் பாஜக தொண்டர்கள் என்று தெரியவந்தது.
புதன்கிழமை, கூச் பெஹர் என்ற பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் அஜிஜார் அலி என்பவர் பாஜக தொண்டர்கள் சிலரால், கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், நிர்மல் குண்டு வீட்டுக்கு, மமதா பானர்ஜி இன்று நேரில் சென்று, அவரது குடும்பத்தினரிடம் துக்கம் விசாரித்தார். இதுபற்றி மேற்கு வங்க மாநில உணவுத்துறை அமைச்சர் ஜோதி பிரியா கூறுகையில், பாஜக தான் இந்தக் கொலைகளின் பின்னணியில் உள்ளது. கூலிப்படையினரை பாஜக தலைவர்கள் ஏவி கொலை செய்துள்ளனர் என்று பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் இவ்வாறு இரு கட்சியினர்கள் நடுவே, குடும்பப் பகை போல வன்முறை சம்பவம் நீண்டு கொண்டே செல்வது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.