அருணாச்சலப் பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலாகிறது
டெல்லி: அருணாச்சலப் பிரதேசத்தில் அரசியல் நெருக்கடி காரணமாக குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரவையின் இந்த பரிந்துரை ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அதன் பின்னர் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வரும். சமீபத்தில்தான் ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமல் செய்யப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.
வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சலப் பிரதேசத்தில் கடந்த 2014-ல் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெற்றது. அதில், மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 42 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. தற்போது அருணாச்சலப் பிரதேசததின் முதல்வராக நபம்துகி பதவி வகிக்கிறார்.
இந்நிலையில் ஆளும் காங்கிரசில் கோஷ்டி பூசல் காரணமாக மாநில அமைச்சரவைக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் ஒரு பிரிவினர் அதிருப்தி அணியாக செயல்பட்டனர். அவர்கள் பா.ஜனதா மற்றும் சுயேச்சைகளுடன் இணைந்து அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.
இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, இட்டா நகர் ஹோட்டலில் போட்டி சட்டசபை கூட்டம் நடத்தப்பட்டது. அதிருப்தி அணியைச் சேர்ந்த துணை சபாநாயகர் நூர் தாங்டாக் என்பவர் இந்த போட்டி சட்ட சபையை நடத்தினார்.
அதில், அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் அரசு கவிழ்ந்ததாக அறிவிக்கப்பட்டது. மேலும் முதலமைச்சருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், புதிய முதல்வராக கலிகோபால் என்பவரைத் தேர்ந்தெடுத்தனர்.
ஆனால், நபம்துகி பதவி விலக மறுத்து விட்டார். இதனால், அவருக்கும், மாநில ஆளுநருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அரசின் அனுமதி இல்லாமலேயே சட்டசபையைக் கூட்ட ஆளுநர் உத்தரவிட்டார்.
இவ்வாறு தொடர் அரசியல் நெருக்கடியால் அருணாச்சலப் பிரதேசத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
இந்த சூழ்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பரிந்துரைக்கப்பட்டது.
மத்திய அமைச்சரவையின் இந்த பரிந்துரை ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.