ஏமாற்று விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்கள் மீது நடவடிக்கை!- மத்திய அமைச்சர்
டெல்லி: ஏமாற்று விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
அசோசேம் அமைப்பு சார்பில் டெல்லியில் வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "மக்களை ஏமாற்றும் விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக மற்ற நாடுகளின் சட்டத் திட்டங்களை நாங்கள் ஆராய்ந்தோம்.
சில நாடுகளில் ஏமாற்று விளம்பரங்களில் பிரபல நடிகர், நடிகையர் நடித்தால், அவர்களுக்கு அபராதம் வழங்கப்படுகிறது. ஒரு சில நாடுகளில், ஏமாற்று விளம்பரங்கள் என்று தெரிந்தே நடிக்கும் பிரபலங்களுக்கு, நடிப்புத் தொழிலில் ஈடுபடுவதற்கு 3 ஆண்டுகள் தடை விதிக்கப்படுகிறது.
மேலும் இதே நிலைத் தொடர்ந்தால் அவர்களுக்கு வாழ்நாள் தடையும் விதிக்கப்படுகிறது.
எனவே இந்தியாவில் போலி விளம்பரங்கள் என்று தெரிந்தே நடிகர், நடிகைகள் நடித்தார்கள் என குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு நடிப்புத் துறையில் ஈடுபட தடை விதிப்பது என்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
இந்தப் பரிந்துரைகள் அனைத்தும் பரிசீலனையில் உள்ளன. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் இந்த மசோதா நிறைவேற்றப்படும்," என்றார்.