பறக்கும் உயரத்தில் குளறுபடி... விமானியின் சாதுர்யத்தால் விமானங்கள் மோதல் தவிர்ப்பு
கொல்கத்தா: ஒரே உயரத்தில் பறந்த இரண்டு விமானங்கள் நடுவானில் மோதி நடக்க இருந்த விபத்து, விமானிகளின் சாமர்த்தியத்தால் தடுக்கப்பட்டது. இதனால், 148 பயணிகள் உயிர் தப்பினர்.
அரபு நாடான மஸ்கட்டில் இருந்து வங்காளதேச தலைநகர் டாக்காவுக்கு வங்காளதேச விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று 148 பயணிகளுடன் சென்று கொண்டு இருந்தது.
கொல்கத்தா வான் எல்லையில் பறந்த போது அந்த விமானம் 33,000 அடி உயரத்தில் பறக்க அனுமதிக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக அதே உயரத்தில் சவுதி ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான சரக்கு விமானம் ஒன்று எதிரே வந்தது.
ஆனால், சரக்கு விமானம் வருவதைக் கவனித்த பயணிகள் விமானத்தின் விமானி அரிபுல் இஸ்லாம், இது தொடர்பாக கொல்கத்தா விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். பின்னர், தனது விமானத்தின் பறக்கும் உயரத்தை 29 ஆயிரம் அடியாக அவர் குறைத்தார்.
பின்னர் சரக்கு விமானம் கடந்து சென்ற பின்னர் மீண்டும் பயணிகள் விமானம் தனது உயரத்தை 33 ஆயிரம் அடிக்கு உயர்த்தியது.
விமானங்கள் பறக்கும் உயரம் குறைக்கப்பட்டதில் குளறுபடி ஏற்பட்டாலும் விமானியின் சாமர்த்தியத்தால் விமான விபத்தும் தவிர்க்கபட்டது குறிப்பிடத்தக்கது.