பணத்தை இரட்டிப்பாக்கிக் கொடுப்பதாகக் கூறி தொழில் அதிபரை ஏமாற்றிய இயக்குனர் ரவிக்குமார் கைது
மும்பை: உண்மை படத்தின் இயக்குனர் பி. ரவிக்குமார் மற்றும் அவரது உதவியாளர்கள் 2 பேர் பண மோசடி வழக்கில் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உண்மை என்ற படத்தை இயக்கி நடித்தவர் பி. ரவிக்குமார்(38). ரவிக்குமார் மற்றும் அவரது உதவியாளர்கள் வி.என். நடராஜன் மற்றும் பெரியசாமி மீது பாலாஜி நாடார்(29) என்ற கூரியர் நிறுவன உரிமையாளர் மும்பை போலீசில் திங்கட்கிழமை புகார் மனு அளித்தார்.
அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது,
இயக்குனர் ரவிக்குமார் அவரது மெய்க்காப்பாளர் செல்வன் கோடார்(37) மூலம் எனக்கு அறிமுகம் ஆனார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மும்பை தாராவி பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நான் கலந்து கொண்டேன். அந்த நிகழ்ச்சியில் ரவிக்குமார் நல்ல காரியத்திற்காக ரூ.25 லட்சம் நன்கொடை அளித்தார். சில நாட்கள் கழித்து கோடார் என்னை தொடர்பு கொண்டு ஜுஹுவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ரவிக்குமாரை சந்திக்குமாறு கூறினார்.

அந்த சந்திப்பின்போது அவருடன் அவரது உதவியாளர்கள் நடராஜன்(43), பெரியசாமி(45) ஆகியோர் இருந்தனர். குலு மணாலியில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வதாகவும் அதற்காக பணம் கடனாக அளித்தால் அதை ஒரு மாதத்தில் இரண்டு மடங்காக திருப்பிக் கொடுப்பதாகவும் ரவிக்குமார் என்னிடம் தெரிவித்தார்.
நானும் அவருக்கு ரூ.3 லட்சம் அளித்தேன். கடந்த ஆண்டு மே மாதம் ரவிக்குமார் அழைப்பின் பேரில் நான் குலு மணாலி சென்றேன். அப்போது அவர் கேட்டபடி அவருக்கு மேலும் ரூ.3 லட்சம் அளித்தேன். பணத்தை 10 நாட்களில் திருப்பிக் கொடுப்பதாக அவர் கூறினார். 10 நாட்கள் மணாலியில் காத்திருந்தும் அவர் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் என்னை மும்பைக்கு செல்லுமாறு கூறினார்.
தான் மும்பை வந்த பிறகு பணத்தை அளிப்பதாக தெரிவித்தார். அதன் பிறகு ஓராண்டு காலமாக ரவிக்குமார் நான் போன் செய்தால் எடுக்காமல் இருந்தார் என்றார்.
நாடார் கடந்த ஜூன் மாதம் தாராவி போலீசாரை பண மோசடி குறித்து அணுகினார். இதையடுத்து கடந்த வாரம் தான் ரவிக்குமார் இருக்கும் இடம் தெரிந்தது. இந்நிலையில் திங்கட்கிழமை மும்பையில் வைத்து ரவிக்குமார், நடராஜன், பெரியசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

சுஜிபாலா:
உண்மை படத்தில் நடிக்கையில் ரவிக்குமாருக்கும், சுஜிபாலாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டு அவர்கள் திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது. திருமணம் நடந்தது உண்மை தான் என்றும், தான் சுஜிபாலாவுக்கு வீடு, தோட்டம் எல்லாம் வாங்கிக் கொடுத்ததாகவும் ரவிக்குமார் தெரிவித்தார். ஆனால் சுஜிபாலாவோ தனக்கு ரவிக்குமாருடன் திருமணம் நடக்கவில்லை என்று கூறியதோடு அவர் தன் மீது ஆசிட் வீசுவதாக மிரட்டினார் என்று போலீசில் புகார் அளித்தார்.
சுஜிபாலா மனைவி என்ற பெயரில் சொத்துக்களை எடுத்துக் கொண்டு தன் மீது போலீசில் பொய் புகார் அளித்ததாக ரவிக்குமார் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications