திருமணமாகாத குத்துச்சண்டை வீராங்கனைகளுக்கு கர்ப்ப பரிசோதனை: விதிமீறல் என டாக்டர் தாக்கு
டெல்லி: அடுத்த வாரம் கொரியாவில் நடக்க உள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்கும் திருமணம் ஆகாத 8 இந்திய குத்துச் சண்டை வீராங்கனைகள் கர்ப்பமாக உள்ளார்களா என்று பரிசோதிக்கப்பட்டுள்ளது. இது விதி மீறலாகும் என்று டாக்டர் சந்திரன் தெரிவித்துள்ளார்.
கொரியாவில் அடுத்த வாரம் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்க உள்ளன. இந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் 8 பெண் குத்துச்சண்டை வீராங்கனைகள் கர்ப்ப பரிசோதனை செய்ய வேண்டும் என்று இந்திய பாக்சிங் அதிகாரிகள் உத்தரவிட்டனர். வீராங்கனைகள் கர்ப்ப பரிசோதனை செய்ய வேண்டும் என்று சர்வதேச குத்துச்சண்டை அசோசியேஷன் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இது குறித்து இந்தியன் பெடரேஷன் ஆப் ஸ்போர்ட்ஸ் மெடிசின் தலைவர் டாக்டர் பி.எஸ்.எம். சந்திரன் கூறுகையில்,
குத்துச்சண்டை வீராங்கனைகள் வலுக்கட்டாயமாக கர்ப்ப பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 8 திருமணமாகாத இளம் வீராங்கனைகளுக்கு இந்த பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது மனித உரிமை மீறல் ஆகும். சர்வதேச குத்துச்சண்டை அசோசியேஷன் விதிமுறைப்படி வீராங்கனைகள் கர்ப்ப பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
இந்தியாவுக்காக குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்று அந்த அப்பாவி பெண்கள் வேறு வழியில்லாமல் கர்ப்ப பரிசோதனை செய்ய ஒப்புக் கொண்டுள்ளனர். விளையாட்டு வீராங்கனைகளின் கௌரவத்தை காக்க மனித உரிமை ஆணையம், பெண்களுக்கான தேசிய கமிஷன் ஆகியவை முன்வர வேண்டும் என்றார்.