மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்துவதில் புதிய சாதனை படைத்த உ.பி! அசத்தி காட்டிய யோகி
லக்னோ: ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சுமார் 4 கோடிக்கும் அதிகமானோருக்கு பயனாளர் அட்டையை கொடுத்து உத்தரப் பிரதேச அரசு புதிய சாதனையை படைத்திருக்கிறது.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

இந்நிலையில் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சுமார் 4 கோடிக்கும் அதிகமானோருக்கு பயனாளர் அட்டையை கொடுத்து உத்தரப் பிரதேச அரசு புதிய சாதனையை படைத்திருப்பதாக அவர் கூறியுள்ளார். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "அனைவருக்கும் சிறப்பான மருத்துவ வசதிகளை உறுதி செய்வதை யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி அரசாங்கம் முதன்மையான பணியாக கருதுகிறது. மாநிலத்தில் 100 சதவீத தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஆயுஷ்மான் அட்டைகளை உருவாக்க போர்க்கால அடிப்படையில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உ.பி.யில் இதுவரை 180 லட்சம் குடும்பங்களுக்கு ஆயுஷ்மான் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதில் 131 லட்சம் குடும்பங்கள் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் ஆயுஷ்மான் அட்டைகளையும், 56 லட்சம் குடும்பங்கள் முதலமைச்சர் ஜன் ஆரோக்கிய யோஜனாவின் கீழ் பெற்றுள்ளன. தேசிய அளவில் உ.பியில்தான் அதிக அளவு ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மருத்துவ பயனாளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
உ.பியில் மொத்தம் 4 கோடியே 15 லட்சத்து 41 ஆயிரத்து 992 ஆயுஷ்மான் கார்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இரண்டாவது இடத்தில் உள்ள மத்திய பிரதேசத்தில் 3 கோடியே 70 லட்சம் கார்டுகளும், 2 கோடியே 3 லட்சம் கார்டுகளுடன் சத்தீஸ்கர் மூன்றாவது இடத்திலும் இருக்கிறது. உ.பியில் மாநிலத்தில் தகுதியான 70 சதவீத குடும்பங்களுக்கு ஆயுஷ்மான் அட்டை வழங்கப்பட்டிருக்கிறது" என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications