உ.பியில் பலாத்கார சம்பவங்கள் அதிகரிப்பு: அதிகாரிகளுடன் அகிலேஷ் அவசர ஆலோசனை
லக்னோ: பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் அவசர ஆலோசனை நடத்தினார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிக அளவு நடந்து வருகின்றன. இதன் உச்சகட்டமாக பதான் என்ற பகுதியில் சகோதரிகள் இருவர் பலாத்காரம் செய்யப்பட்டு மா மரத்தில் தூக்கில் தொங்கவிட்டு கொல்லப்பட்டனர்.
அதே நேரம் உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ்யாதவ், பத்திரிகையாளர்களிடம் பொறுப்பற்ற வகையில் பதில் அளித்துவந்தார். உலகில் எல்லா இடத்திலும் இதுபோலத்தான் நடப்பதாக அகிலேஷ் அலட்சியமாக பேசினார். அவரது தந்தையும் ஆளும் சமாஜ்வாடி கட்சி தலைவருமான முலாயம்சிங் யாதவும், ஆண் பிள்ளைகள் அப்படித்தான் இருப்பார்கள் என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
இதையடுத்து உ.பி அரசை கலைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழத்தொடங்கின. தேசிய பெண்கள் ஆணையம், இதில் தலையிட்டு ஆய்வு நடத்தியதுடன், அகிலேஷ் யாதவை பதவி விலக கேட்டுக்கொண்டது. பகுஜன் சமாஜ் மற்றும் பாஜகவினர் உ.பி அரசை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று போராட்டங்கள் நடத்தினர்.
இன்று நாடாளுமன்றத்தில் ராஜ்யசபாவில் உ.பி பாலியல் பலாத்கார பிரச்சினை கிளப்பப்பட்டது. நிலைமை விபரீதமாவதை உணர்ந்த அகிலேஷ் யாதவ் கடந்த சில தினங்களாக நிர்வாகரீதியாக மாற்றங்களை செய்ய ஆரம்பித்துள்ளார்.
மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் கண்காணிப்பாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோரை ஒரே நாளில் பணியிடமாற்றம் செய்து அகிலேஷ் உத்தரவிட்டார். இதையடுத்து இன்று உயர் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
மொத்தமுள்ள 85 மாவட்டத்து கலெக்டர்கள், போலீஸ் எஸ்.பிக்களுடன் தலைநகர் லக்னோவில் அவர் இன்று ஆலோசனை நடத்தினார். சட்டம் ஒழுங்கை சீர்படுத்த அப்போது அவர் உத்தரவிட்டார்.