உபி.யில் ரயில் மீது கார் மோதி அமைச்சர் பலி: ரயில் மீது பொதுமக்கள் கல்வீச்சு
லக்னௌ: உத்தர பிரதேசத்தில் கார் மீது ரயில் மோதியதில் அந்த மாநில அமைச்சர் சதாய் ராம் யாதவ் உள்பட 3 பேர் பலியானார்கள்.
சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரான சதாய் ராம் யாதவ் (61) இன்று காலை ஒரு காரில் சென்றுகொண்டிருந்தார். அவர்களின் கார் கல்சாகா என்ற இடத்தில் உள்ள ஆளில்லா ரெயில்வே கேட்டை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த பயணிகள் ரெயில் மோதியது.
இந்த விபத்தில் காரில் சென்ற மந்திரி யாதவ் மற்றும் அவரது பாதுகாவலர் பிக்ரம் வர்மா (27), டிரைவர் ரோகித் தீக்சித் (35) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்தில் குவிந்த மந்திரியின் ஆதரவாளர்கள், ஆத்திரத்தில் ரெயில் மீது கற்களை வீசி தாக்கினர். ரயில்வே போலீசாரும், உள்ளூர் போலீசாரும் அவர்களை கட்டுப்படுத்தியபிறகு ரெயில் புறப்பட்டுச் சென்றது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.