குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோரை ஜெயில்ல போடனும்!... உ.பி. அமைச்சர் பேச்சால் சர்ச்சை!!
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோரை ஜெயிலில் போட வேண்டும் என்று உத்தரபிரதேச மாநில அமைச்சர் பேச்சால் சர்ச்சை கிளம்பியுள்ளது.
லக்னோ: பள்ளிச் செல்ல வேண்டிய குழந்தைகளை பள்ளி அனுப்பாத பெற்றோரை சிறையில் உணவு, தண்ணீர் கொடுக்காமல் தள்ள வேண்டும் என்று உத்தரப்பிரதேச மாநில அமைச்சர் ஓம்பிரகாஷ் ராஜ்பர் கூறிய கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் ஓம்பிரகாஷ் ராஜ்பர். இவர் சமீபத்தில் ரஸ்தா பகுதியில் நடந்த கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில் நான் சட்டத்தை எனது விருப்பப்படி மாற்றப் போகிறேன். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்களை சிறையில் 5 நாள்கள் உட்கார வைக்க வேண்டும். அங்கு உணவு, தண்ணீர் கூட வழங்கக் கூடாது.
6 மாதங்கள் சிறை
பெற்றோர்களே நீங்கள் உங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாவிட்டால் உங்களை போலீஸ் தூக்கிக் கொண்டு செல்லும். நான் சொல்வது உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன். அப்படியும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாவிட்டால் அந்த பெற்றோரை 6 மாதங்களுக்கு சிறையில் தள்ள வேண்டும் என்று கூறினார்.
|
வீடியோ பேச்சு
இவ்வாறு சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அமைச்சர் பேசியது குறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதையடுத்து இவரது பேச்சு புயலை கிளப்பியுள்ளது.
குழந்தைகளின் கல்விக்காக...
இதுதொடர்பாக ஓம்பிரகாஷ் ராஜ்பர் கூறுகையில் பள்ளிக்கு அனுப்பாதோரை சிறைப்படுத்துவேன் என்று நான் அச்சுறுத்தியதில் என்ன தவறு கண்டுவிட்டீர்கள். ஏழை குழந்தைகளின் கல்விக்காக மாநில அரசு பல்வேறு விதமான ஏற்பாடுகளை செய்து கொடுத்து வருகிறது.
முதல்வரிடம் விளக்கம் இல்லை
ஆனாலும் அவர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை என்றார் அவர். ஓம்பிரகாஷ் கூறிய கருத்துகள் தொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து விளக்கம் அளிப்பீர்களா என்று செய்தியாளர்கள் கேள்விக்கு அவர் இல்லை என்றார்.