தேசியவாத காங். ஆதரவை ஏற்பதும், ஏற்காததும் பாஜகவின் விருப்பம் - ஆர்.எஸ்.எஸ்.
லக்னோ: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெறுவதும், பெறாததும் பாஜகவின் விருப்பமாகும். அதில் நாங்கள் தலையிட மாட்டோம் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கூறியுள்ளது. இந்த முடிவை பாஜகவே தன்னிச்சையாக எடுக்கலாம் என்றும் அது கூறியுள்ளது.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றதன் மூலம் மகாராஷ்டிராவில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உயர்ந்துள்ளது. எனினும் இன்னொரு கட்சியின் ஆதரவுடன்தான் அது ஆட்சியமைக்க முடியும். அந்த ஆதரவைத, நிபந்தனையில்லாத, வெளியிலிருந்து ஆதரவை தருவதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி நேற்றே அறிவித்து விட்டது.
இந்த ஆதரவை பாஜக ஏற்குமா, அதை ஆர்எஸ்எஸ் அமைப்பு அனுமதிக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து இன்று லக்னோ நகரில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பய்யாஜி ஜோஷி கூறியதாவது :-
தேசியவாத காங்கிரஸ்...
தேசியவாத காங்கிரஸ் கட்சி என்ன சொல்லியுள்ளது என்பது குறித்து எனக்குத் தெரியாது. ஆனால் பாஜகதான் அது குறித்து முடிவெடுக்க வேண்டும்.
அரசியல் பிரச்சினை...
இது அரசியல் பிரச்சினை. எனவே இதை பாஜகவிடமே விட்டு விடுகிறோம். மேலும் லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவுக்கு கிடைத்த வெற்றிக்கு நாங்கள் காரணமல்ல.
பிரச்சாரம்...
நாட்டுக்கு காங்கிரஸ் நல்லது செய்யவில்லை என்பதால் பாஜகவை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். நாங்கள் மக்களிடம், வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்து பிரசாரம் மட்டுமே செய்தோம்.
அரசியல் சுத்தமாகும்...
மக்கள் அதிக அளவில் அரசியலில் பங்கேற்கும் நிலை வர வேண்டும். அப்போதுதான் அரசியல் சுத்தமாகும் என்றார் ஜோஷி.
கிராமங்கள் தத்தெடுக்கும் திட்டம்...
மேலும், அடுத்த வருடத்திற்குள் நாடு முழுவதும் 250 கிராமங்களை தனது அமைப்பு தத்தெடுத்து மேம்படுத்தும் என்றும் பய்யாஜி ஜோஷி தெரிவித்துள்ளார்.