ஆறு மாத ஆட்சி காலத்தில் மோடி மீது நகர மக்களுக்கு நம்பிக்கை குறையவில்லை: கருத்துக் கணிப்பு
மும்பை: நரேந்திர மோடி பிரதமராகி ஆறு மாதங்கள் ஆகியுள்ள நிலையில் நகர்ப்புறங்களில் அவருக்கு மக்களிடையே ஆதரவு அப்படியே உள்ளதாக பெங்களூருவை சேர்ந்த போர்த்லைன் டெக்னாலஜிஸ், என்ற அமைப்பு நடத்திய கணக்கெடுப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கணக்கெடுப்பில் பங்கேற்ற நகர்ப்புற மக்களில் 82 சதவீதம் பேர், பிரதமர் என்று ஒருவர் தனது வேலைகளை பார்த்துக் கொண்டிருப்பதாக உணரத் தொடங்கியுள்ளதாக கூறியுள்ளனர்.
அதே நேரம் கருப்பு பணத்தை மீட்பது, கருப்பு பண முதலைகள் பெயரை வெளியிடுவது போன்றவற்றில் மோடி, மீது 84 சதவீதம் பேருக்குதான் நம்பிக்கை உள்ளதாம். கார் வைத்துள்ளோரிடம் இந்த நம்பிக்கை தேர்தலின்போது இருந்ததைவிட 10 சதவீதம் குறைந்துள்ளது.
மோட்டார் பைக் வைத்துள்ளோரிடம் மோடி மீதான நம்பிக்கை 8 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால் பஸ் போன்ற பொது வாகனங்களில் பயணிப்போர் கருப்பு பண விவகாரத்தில் மோடி நடவடிக்கை எடுப்பார் என அதிகம் நம்புகின்றனர்.
மோடி மீது நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினர் நம்பிக்கை வைத்துள்ளதாகவே அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். டெல்லி பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவு துறை பேராசிரியர் பிரதீப் குமார் தத்தா கூறுகையில், "நகர்ப்புற மக்களிடையே மோடி அரசின் தேனிலவுக் காலம் முடிவடையவில்லை. அதே நேரம் கிராமப்புறங்களில் இந்த நிலை எப்படி உள்ளது என தெரியவில்லை" என்றார்.
இந்த கருத்துக் கணிப்பு நாடு முழுவதிலும் மொத்தம், 927பேரிடம் எடுக்கப்பட்டுள்ளது.