ஆதார் கார்டை அனைத்து சேவைகளுக்கும் பயன்படுத்த முடியாது - சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
டெல்லி: ஆதார் அட்டையை அனைத்து சேவைகளுக்கும் இப்போதைக்குப் பயன்படுத்த முடியாது. மத்திய அரசின் மானியத் திட்டங்களுக்கு மட்டுமே அதைப் பயன்படுத்தலாம். அதேசமயம், அதை மத்திய அரசு கட்டாயமாக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பை அளித்துள்ளது.
மேலும் இந்த வழக்கை அரசியல் சாசன பெஞ்சுக்கும் அது மாற்றியுள்ளது. அந்த பெஞ்ச்சில் தீர்ப்பு வரும் வரை இன்று பிறப்பித்த உத்தரவு அமலில் இருக்கும் என்றும் அது கூறியுள்ளது.
நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை என்ற பெயரில் அடையாள அட்டையை மத்திய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது. வங்கி கணக்கு துவ்ஙக, ஓய்வூதியம் பெற, திருமணத்தை பதிவு செய்ய உள்ளிட்ட சில சேவைகளுக்கு ஆதார் அட்டை கட்டாயம் இருக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்தன.
இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி புட்டாசுவாமி கடந்த 2012ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆதார் அட்டையை கட்டாயமாக்கக் கூடாது என்று தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை மறுபரிசீலிக்குமாறு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டது.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி இந்த வழக்கு விசாரணை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. அந்த அமர்வு முடிவு எடுக்கும் வரை ஆதார் அட்டை வினியோகிக்க தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.
அதில் கூறியிருந்ததாவது,
மண்எண்ணெய், சமையல் எரிவாயு மற்றும் ரேஷன் பொருட்களை வழங்க மட்டும் ஆதார் அட்டையை மத்திய, மாநில அரசுகள் பயன்படுத்திக்கொள்ளலாம். மற்ற சேவைகளுக்கு ஆதார் அட்டையை கட்டாயப்படுத்தக் கூடாது. இவைகளுக்கு ஆதார் அட்டை அவசியமில்லை என அரசு பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும். குற்ற வழக்குகள் தொடர்பாக நீதிமன்றங்கள் கேட்டுக்கொண்டால் ஒழிய ஆதார் அட்டையில் உள்ள தனிநபரின் விவரங்களை வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சூழலில் இந்த மனுக்கள் மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி கூறுகையில், ஆதார் அட்டையால் தவறான வழியில் மானியம் பெறுவது தடுக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஓராண்டில் மட்டும் அரசுக்கு ரூ.14 ஆயிரம் கோடி மிச்சமாகியுள்ளது என்றார்.
சுமார் 2 மணிநேரம் இந்த விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் அனைத்து சேவைகளுக்கும் ஆதார் அட்டை கட்டாயம் தேவையா என்பது பற்றி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
இதுகுறித்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
ஆதார் கார்டை வங்கிக் கணக்கு தொடங்குவது, தொலைபேசி இணைப்பைப் பெறுவது உள்ளிட்டவற்றுக்குப் பயன்படுத்த முடியாது.
மத்திய அரசின் மானியங்களப் பெறுவதற்கு மட்டுமே இதைப் பயன்படுத்தலாம். இதுவும் கூட மக்கள் விரும்பிக் கொடுத்தால்தான். கொடுக்க வேண்டும் என அரசு கட்டாயப்படுத்தக் கூடாது.
இந்த வழக்கை அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றி உத்தரவிடுகிறோம். அதன் தீர்ப்பு வரும் வரை இன்றைய தீர்ப்பு அமலில் இருக்கும் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.