"இந்தியா, பாக் வசமுள்ள ஜம்மு காஷ்மீரை இணைத்து தனிநாடாக்க வேண்டும்"- மீண்டும் சர்ச்சையில் வைதிக்!!
டெல்லி: இந்தியா மற்றும் பாகிஸ்தான் வசமுள்ள ஜம்மு காஷ்மீரை ஒன்றாக இணைத்து தனிநாடாக்க வேண்டும் என்று கூறி மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் யோகா குரு பாபாராம்தேவின் நண்பரான வேத் பிரதாப் வைதிக்.
பாகிஸ்தான் சென்ற வைதிக் அங்கு ஜமா உத் தவா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஹபீஸ் சயீத்தை சந்தித்து பேசினார். மும்பை தாக்குதல் வழக்கில் முதன்மை குற்றவாளியான சயீத்தை எப்படி வைதிக் சந்திக்கலாம் என்று பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
வைதி- ஹபீஸ் சயீத் சந்திப்புக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ததா? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. நாடாளுமன்ற சபைகளிலும் இந்த பிரச்சனை வெடித்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் பாகிஸ்தானின் டான் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் காஷ்மீரை தனிநாடாக்க வேண்டும் என்று கூறி மற்றொரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் வைதிக்.
அந்த பேட்டியில், இந்தியாவும் பாகிஸ்தானும் பாகிஸ்தானுக்காக சண்டை போடுவதை நிறுத்த வேண்டும். இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள காஷ்மீர மக்கள் விரும்பினால் அதை ஒரு தனிநாடாக்கிவிட வேண்டும். காஷ்மீர மக்களுக்கு சுதந்திரம் அவசியமானது. நான் டெல்லியில் என்ன சுதந்திரத்தை அனுபவிக்கிறேனோ, லாகூரில் பத்திரிகையாளர்களும் மற்றவர்களும் என்ன சுதந்திரத்தை அனுபவிக்கிறார்களோ அதை காஷ்மீரத்து மக்களும் அனுபவிக்க வேண்டும்.
அதற்காக இந்தியாவின் கீழுள்ள காஷ்மீரத்தை மட்டும் பிரித்து தனிநாடாக்குவது என்பது மிகவும் தவறான நடவடிக்கை. அது இந்தியாவுக்கு பாதிப்பு என்பதைவிட காஷ்மீரத்துக்கும் பாகிஸ்தானுக்கும்தான் ஆபத்தானது என்று வைதிக் கூறியுள்ளார்.
காஷ்மீர் பிரிவினைவாதிகளே சொல்லாத கருத்து- குலாம்நபி ஆசாத்
{ventuno}
ராஜ்யசபாவில் இந்த விவகாரம் குறித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், பாகிஸ்தான் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் காஷ்மீரை தனிநாட்டை ஆதரிப்பதாக வைதிக் கூறியிருக்கிறார். இப்படியான கருத்தை காஷ்மீரத்து பிரிவினைவாதிகளே முன்வைத்தது இல்லை.
ஹபீஸ் சயீத் இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களுக்கு நேரடியாகவோ மறைமுகமாவோ உதவி இருக்கிறார். அவரை சந்தித்தது கவலைக்குரிய விஷயம். நாட்டின் பாதுகாப்பு தொடர்பானதும் கூட. இது நாட்டின் பாதுகாப்புக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்.. இது குறித்து அரசு விரிவான விளக்கம் தர வேண்டும் என்றார்.