காவிரி பாதுகாப்பு இயக்கத்தைத் தொடங்குகிறார் வைகோ! தஞ்சாவூரில் 20-ந் தேதி ஆலோசனை!!
சென்னை: காவிரி பாதுகாப்பு இயக்கத்தைத் தொடங்க இருப்பதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் இன்று வைகோ கூறியதாவது:
மத்தியில் நடைபெறுவது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அல்ல. பாரதிய ஜனதா அரசு.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாக இருந்தால் கூட்டணிக் கட்சிகளை அழைத்து ஆலோசனை நடத்தியிருக்கும். ஆனால் இதுவரை அப்படி எந்த ஒரு கூட்டத்தையும் பாரதிய ஜனதா கூட்டியது இல்லை.
நரேந்திர மோடி அரசு இதுவரை காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை. காவிரியில் கர்நாடக அரசு அணை கட்டும் முடிவை கைவிட வேண்டும்.
காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுனால், தமிழகத்தில் 3 கோடி விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். சென்னைக்கு குடிநீர் கிடைக்காது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கக் கூடாது.
காவிரிப் படுகையில் மீத்தேன் எடுப்பது ஆபத்தானது. நிலத்தில் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும். இதனால், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும். விவசாயிகள் உணவுக்க கையேந்தும் அவல நிலை ஏற்படும்.
இத்தகைய சூழலில் காவிரி பாதுகாப்பு இயக்கம் ஒன்றை அரசியல் சார்பற்று தொடங்க இருக்கிறோம். இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூரில் 20-ந் தேதி நடைபெற உள்ளது.
இவ்வாறு வைகோ கூறினார்.