சச்சின் பைலட் புரட்சி.. ராஜஸ்தான் காங்கிரஸுக்குள் கலாட்டா.. ஒரு வழியாக வாய் திறந்தார் வசுந்தரா ராஜே
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் காங்கிரஸில் ஏற்பட்டுள்ள குழப்பம் துரதிர்ஷ்டவசமானது. காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி மோதலால் மக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் முதல்வரும், மூத்த பாஜக தலைவருமான வசுந்தரா ராஜே சிந்தியா கருத்து தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் காங்கிரஸ் குழப்பம் தொடர்பாக முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார் வசுந்தரா ராஜே.. இந்த விவகாரம் தொடர்பாக அவர் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து வந்தார். இதற்கு முக்கியக் காரணம், வசுந்தராவுக்கு மிக முக்கியமான எதிரி சச்சின் பைலட். அவரை ஆதரிக்கப் போய், நாளை அவர் பாஜகவில் சேர்ந்தால் தனக்குத்தான் அது முதல் ஆப்பாக அமையும் என்பதால் வசுந்தரா பேசாமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காங்கிரஸ் விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார் வசுந்தரா ராஜே சிந்தியா. இதுகுறித்து அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள மோதலால் ராஜஸ்தான் மாநில மக்கள் பாதிக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது. இந்த விவகாரத்தில் பாஜகவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. இதில் பாஜகவை இழுப்பது சரியல்ல. பாஜக தலைவர்கள் மீது சேற்றை வாரி இறைப்பதும் கண்டனத்துக்குரியது.
மக்களின் நலன்தான் முக்கியமானது. மக்களைப் பற்றி மட்டும்தான் நான் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கவலைப்பட முடியும் என்று கூறியுள்ளார் வசுந்தரா ராஜே சிந்தியா. சச்சின் பைலட் விவகாரம் குறித்து வசுந்தரா அமைதிக்குப் பின்னர் கருத்து கூறியிருந்தாலும் கூட அந்த கருத்தில் வலிமை இல்லை என்று தற்போது புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.
தொலைபேசியில் முன்னாள் முதல்வர்... கருணை காட்டிய விஜய பாஸ்கர்... பறந்த ஆம்புலன்ஸ்!!
அழுத்தம் திருத்தமாக தனது கருத்தை வசுந்தரா பதிவு செய்யவில்லை. ஏதாவது சொல்ல வேண்டுமே என்ற ரீதியில்தான் அவர் பேசியிருப்பதாக தெரிகிறது என்றும் பேசப்படுகிறது.
இதற்கிடையே, ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 19 பேரை தகுதி நீக்கம் செய்வது தொடர்பான சபாநாயகர் சிபி ஜோஷியின் நோட்டீஸை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் வரும் செவ்வாய்க்கிழமைக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது ராஜஸ்தான் உயர்நீதிமன்றம்.