பெங்களூருவில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற வாட்டாள் நாகராஜ் கைது! #cauveryprotest
பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற கன்னட சலுவாளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் இன்று கைது செய்யப்பட்டார்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு கர்நாடகா காவிரி நீரை திறந்துவிட்டு வருகிறது. இதற்கு எதிராக கர்நாடகாவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
கடந்த 9-ந் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று கர்நாடகா முழுவதும் ரயில் மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
பெங்களூரு, மாண்டியாவில் கன்னட அமைப்பினர் ரயில் மறியலில் ஈடுபட முயற்சித்தனர். ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இதேபோல் பெங்களூரு மெஜஸ்டிக் பகுதியில் மறியலில் ஈடுபட முயன்ற கன்னட சலுவாளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜையும் அவரது ஆதரவாளர்களையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற கன்னட ரக்ஷ்ன வேதிகே அமைப்பினரையும் போலீசார் கைது செய்தனர்.