கின்னஸில் இடம்பிடித்த வதோதரா ரத்த அழுத்த பரிசோதனை முகாம்
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற ரத்த அழுத்த பரிசோதனை முகாம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
உலக சுகாதார தினத்தையொட்டி குஜராத் மாநிலம் வதோதரா நகராட்சியின் சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் மாபெரும் ரத்த அழுத்த இலவச பரிசோதனை முகாம் நடைபெற்றது.
வதோதரா நகரின் அகோட்டா பகுதியில் உள்ள விளையாட்டு திடலில் நடைபெற்ற இம் முகாமில் 227 அரசு மருத்துவர்கள் பங்கேற்று 8 மணி நேரத்துக்குள் 8 ஆயிரத்து 368 பேருக்கு ரத்த அழுத்த பரிசோதனையை மேற்கொண்டனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் 8 ஆயிரத்து 26 பேருக்கு 8 மணி நேரத்துக்குள் ரத்த அழுத்த பரிசோதனை செய்யப்பட்டது தான் முந்தைய உலக சாதனையாக கருதப்பட்டது. அந்த சாதனையை வதோதரா நகரில் நடைபெற்ற இந்த முகாம் முறியடித்து விட்டது.
வதோதரா நகர மேயர் பரத் ஷா, நகராட்சி ஆணையர் மணிஷ் பரத்வாஜ் ஆகியோரிடம் கின்னஸ் புத்தகத்தில் தற்போது இடம் பெற்றுள்ள இந்த புதிய சாதனைக்கான சான்றிதழை கின்னஸ் நடுவர் லூசியா சினிகலியேசி நேற்றிரவு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.