பெங்களூரில் பொது இடங்களில் குப்பை போடுபவர்களை மடக்கி பிடிக்க ரோந்து படை!
பெங்களூர்: பெங்களூரில் இரவோடு இரவாக பொது இடங்களில் குப்பைகளை கொட்டிவிட்டு தப்பியோடுபவர்களை கண்டுபிடிக்க ராத்திரி நேர கண்காணிப்பு படை அமைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு மாநகராட்சிக்கு வரும் ஜூலை இறுதிக்குள் தேர்தல் நடைபெற உள்ளது. இதுகுறித்து பெங்களூர் நகர பொறுப்பு அமைச்சர் ராமலிங்க ரெட்டி, இன்று, மாநகராட்சி நிர்வாக அதிகாரி விஜயபாஸ்கர் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதன்பிறகு நிருபர்களிடம் பேட்டியளித்த ராமலிங்க ரெட்டி, பெங்களூர் மாநகராட்சிக்கு ஜூலை மாத இறுதிக்குள் தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளோம். இடஒதுக்கீடு பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் விரைவில் அளிக்க உள்ளோம்.
பெங்களூரு நகரில் குப்பை கொட்டும் பிரச்சினை முதன்மையாக உள்ளது. இரவு நேரங்களில் பெரிய ஹோட்டல்கள், கோழிக்கடையினர், பொதுமக்கள் நடமாடும் பகுதிகளிலுள்ள காலி இடங்களிலோ, குடியிருப்பு பகுதிகளிலோ குப்பைகளை கொட்டிவிடுகின்றனர். இதை தடுக்க இரவு நேர கண்காணிப்பு படை அமைக்கப்படும்.
மாநகராட்சியின் 8 மண்டலங்களிலும் இந்த கண்காணிப்பு படை இரவு நேரங்களில் ரோந்து செல்லும். குப்பையை கொட்டுபவர்களை கையும் களவுமாக பிடிப்பதுடன், அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்யவும் இந்த குழுவுக்கு அதிகாரம் உண்டு என்றார்.