பலாத்கார வழக்கை பதிவு செய்யாத போலீசாரை அடித்து உதைத்த கிராம மக்கள்
லக்னொ: பலாத்கார வழக்கை பதிவு செய்ய மறுத்த போலீசாரை பொதுமக்கள் அடித்து உதைத்த சம்பவம் உத்தர பிரேதசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், முசாபர்நகர் மாவட்டத்தின், பாசி கிராமத்திலுள்ள மயானத்தில் வைத்து, மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டார். இதுகுறித்து நேற்றுதான் அந்த பெண்ணின் உறவினர்கள் போலீசில் புகார் அளிக்க முன்வந்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர், சாபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் புகாரை ஏற்க போலீசார் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதை கேள்விப்பட்டதும், சுற்றுவட்டாரத்து கிராம மக்கள் சாபூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகாரை பெறுமாறு போராட்டம் நடத்தினர். போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், புகாரை பதிவு செய்ய மறுத்த காவல் நிலைய அலுவலரை மக்கள் தாக்க தொடங்கினர். மக்களிடம் இருந்து தப்பிக்க சாலைக்கு ஓடிய அந்த போலீஸ்காரரை துரத்தி சென்று மக்கள் அடித்து உதைத்தனர்.
தகவல் அறிந்ததும், மாவட்ட நீதிபதி குசால்ராஜ், சீனியர் எஸ்.பி எச்.என்.சிங் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மக்களை சமாதானப்படுத்த முயன்றபோது சீனியஸ் எஸ்.பியையும் மக்கள் தாக்க தொடங்கினர். அவரது சீருடையை கிழித்து அடித்து உதைத்தனர். புகாரை ஏற்க மறுத்தது மட்டுமின்றி பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கும் போலீசார் அழைத்துச் செல்லவில்லை என்று மக்கள் கோஷமிட்டனர். நிலைமை கட்டுப்பாட்டை மீறுவதை அறிந்த மாவட்ட நீதிபதி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்ட பகுதியில் தற்போது அமைதி நிலவி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.