பொங்கி பிரவாகமாகக் கொட்டும் தூத்சாகர் அருவி... ரயிலை மூழ்கடித்துச்செல்லும் தண்ணீர் - வைரல் வீடியோ
தென்மேற்குப் பருவமழை கோவாவில் தீவிரமடைந்துள்ள நிலையில் தூத்சாகர் அருவியில் பெருவெள்ளம் கொட்டி வருகிறது.
கோவா: 40 ஆண்டுகள் காணாத அதி தீவிர கனமழை கோவாவில் கொட்டி வருவதால் அங்குள்ள தூத்சாகர் அருவியில் தண்ணீர் பிரவாகமெடுத்துள்ளது. அருவியில் இருந்து விழும் தண்ணீர் அபாய கட்டத்தை தாண்டி மாண்டோவி ஆற்றில் பெருவெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. பாலத்தின் மேல் ரயில் நிறுத்தப்பட்டுள்ளதன் பின்னணியில் தூத்சாகர் அருவி ஆக்ரோஷமாக கொட்டும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிரா, கோவாவில் பெய்து வரும் மழையால் அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. 10 நாட்களுக்கும் மேலாக விடாமல் கொட்டி வரும் மழையால் பல மாவட்டங்களில் நிலச்சரிவு உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
கோவா, கர்நாடகா ரயில்பாதையில் உள்ள தூத்சாகர் அருவியில் பெருவெள்ளமென தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. தூத் சாகர் அருவி பனாஜி நகரிலிருந்து 72 கிலோமீட்டர் தொலைவில் கர்நாடக-கோவா எல்லையில் அமைந்திருக்கிறது.
மலை உச்சியில், சுமார் 310 மீட்டர் உயரத்திலிருந்து பிரம்மாண்ட கடலே மேலிருந்து வீழ்வது போன்று, பொங்கி வழிந்துவருவதால், தூத் சாகர் அருவியைப் பாற்கடல் நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கிறார்கள். தூத் சாகர் அருவியின் அருகில் கால்லெம் ரயில் நிலையம் உள்ளது. ரயில் பாலத்தின் மீது அருவியின் பின்னணியில் ரயில் செல்லும்போது, அதைக் காணும் அனுபவம் பரவசமூட்டும்.
தற்போது கோவாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவிகளில் வெள்ளமென தண்ணீர் பொங்கி பிரவாகமெடுத்துள்ளது. அங்குள்ள பிரசித்தி பெற்ற தூத்சாகர் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. அருவிக்கு அருகில் உள்ள பாலத்தில் ரயில் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
WATCH: A train passing through Doodhsagar waterfall in South Western Railway, halted due to heavy rainfall. @RailMinIndia pic.twitter.com/lrGbfPpYbd
— Prasar Bharati News Services पी.बी.एन.एस. (@PBNS_India) July 28, 2021
ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயிலையும் தாண்டி தண்ணீர் கொட்டி வருவதால் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. அழகான இந்த காட்சிகள் இந்திய ரயில்வே அமைச்சகத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.