மத்தியப் பிரதேசத்தில் மதரீதியிலான துண்டு பிரசுரங்கள் வினியோகம்
போபால்: அடுத்தகட்ட வாக்குப்பதிவை சந்திக்க உள்ள மத்திய பிரதேசத்தில் மதரீதியிலான துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டு வருவதால் அங்கு பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் அடுத்தகட்ட வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதனிடையே மாநிலத்தின் மேற்கு மாவட்டங்களில் வலதுசாரி அமைப்புகளான ஆர்எஸ்எஸ், விஸ்வஹிந்து பரிஷத் ஆகியவற்றின் நிர்வாகிகள் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வினியோகித்து வருகிறார்கள்.
அதில், இதுதான் சரியான நேரம், இப்போது விட்டால் எப்போதும் முடியாது, இந்த நாடு முழு பெரும்பான்மை கொண்ட ஒரு அரசுதான் இப்போது தேவை. அப்போதுதான் அரசு வலிமையாகவும் நிலையாகவும் இருக்கும் என்பது போன்ற வாசகங்களுடன் ''பங்களாதேஷத்தில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ள 3 கோடி முஸ்லிம்களிடமிருந்து நாட்டுக்கு விடுதலை பெற்றுத்தர வேண்டும். துரோகிகளிடமிருந்து காஷ்மீருக்கு விடுதலை தேவை'' என்பது போன்ற வாசகங்களும் இடம் பெற்றுள்ளன.
இந்த துண்டு பிரசுரத்தில் எந்த ஒரு கட்சியின் பெயரோ அல்லது சின்னமோ இடம்பெறவில்லை என்றபோதிலும், நரேந்திரமோடி மற்றும் பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் புகைப்படங்கள் உள்ளன.
இந்த சர்ச்சைக்குறிய துண்டு பிரசுர வினியோகம் குறித்து மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் இன்னும் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.