அஸாம், மேற்கு வங்கத்தில் 69 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது.. ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்!
கொல்கத்தா: அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
அஸாமில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாகவும் சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
மேற்கு வங்கம், அஸாம் தேர்தல்
அதன்படி கடந்த 27-ம் தேதி அஸாம் மற்றும் மேற்கு வங்கத்தில் 77 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் நடந்தது. அஸாமில் 47 தொகுதிகளுக்கும்,மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளுக்கும் முதற்கட்ட தேர்தல் நடந்தது. இந்த நிலையில் அஸாம் மற்றும் மேற்கு வங்கத்தில் 69 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் இன்று தொடங்கியது.
வாக்குப்பதிவு தொடங்கியது
அஸாமில் 39 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு தொடங்கியது. வங்கத்தில் இன்று தேர்தல் நடைபெறும் 30 தொகுதிகளில் 15-ல் சிபிஎம் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளான சஞ்சுக்தா மோர்ச்சா, காங்கிரஸ், ஐ.எஸ்.எப் ஆகியவை எஞ்சிய தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
மம்தா பானர்ஜி தொகுதி
மேற்கு வங்கத்தில் கிழக்கு, மேற்கு மிட்னாப்பூரில் தலா 9 தொகுதிகள், பங்குராவில் 8 தொகுதிகள், தெற்கு 24 பர்கானாவில் 4 தொகுதிகளில் வாக்குப் பதிவு தொடங்கியது. மேற்கு வங்கத்தில் 2-ம் கட்ட தேர்தல் களத்தில் மொத்தம் 171 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியிலும் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. நந்திகிராம் தொகுதியில் மம்தாவை எதிர்த்து, மம்தாவின் முன்னாள் நண்பரும், தற்போதைய எதிரியுமான சுவேந்து அதிகாரி பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.
முகக் கவசம் அணிந்து வாக்குப்பதிவு
வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். முதல் கட்ட தேர்தலை போலவே உடல் வெப்ப பரிசோதனை, சமூக இடைவெளி போன்ற கொரோனா தடுப்பு விதிமுறைகளுக்கு பின்னரே வாக்குச்சாவடியின் உள்ளே வாக்காளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். மாஸ்க் அணிந்தவர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுகின்றனர். ஒரு வாக்குச்சாவடிக்கு ஆயிரம் பேர் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கபடுகின்றனர். மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
மாவோயிஸ்ட் ஆதிக்கமுள்ள பகுதிகள்
அசாமில் 345 வேட்பாளர்களும், மேற்கு வங்கத்தில் 176 வேட்பார்களும் களத்தில் உள்ளனர். அஸாமில் இரண்டாம் தேர்தல் நடைபெறும் பெரும்பாலான பகுதிகள் மாவோயிஸ்ட் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். எனவே அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய படைகளும், உள்ளூர் போலீசாரும் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதி பதட்டமானவை என்பதால் அங்கு பாதுகாப்பு படை வீரர்கள், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.