அமேதி தொகுதியில் பிரியங்கா காந்தி - ஸ்மிருதி இரானி பரஸ்பரம் காட்டமான தாக்கு!
அமேதி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் இப்போது பிரசார போர்க்களமானது பிரியங்கா மற்றும் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியை மையமாக வைத்து சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது.
அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் டிவி நடிகை ஸ்மிருதி இரானியும் ஆம் ஆத்மி சார்பில் குமார் விஸ்வாஸும் போட்டியிடுகின்றனர்.
தொடக்கத்தில் ராகுலை எதிர்த்து குமார் விஸ்வாஸ் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அதன் பின்னர் ஸ்மிருதி இரானியும் களத்துக்கு வந்தார். ஆனால் ராகுலுக்கு ஆதரவாக பிரியங்கா களத்தில் குதிக்க இப்போது பிரியங்கா காந்தி VS ஸ்மிருதி இரானி தான் போட்டி என்றாகிவிட்டது.
'வெளியாள் ஸ்மிருதி இரானி'
அமேதி தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரியங்கா காந்தி, ஸ்மிருதி இரானி, குமார் விஸ்வாஸ் போன்ற வெளியாட்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
ஸ்மிருதி பதிலடி
இதற்கு ஸ்மிருதி இரானியோ, நாங்கள் வெளியாக இருக்கிறோம் என்பது பிரச்சனை இல்லை.. கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை முறை அமேதி தொகுதிக்கு ராகுல் காந்தி வந்திருப்பார் என்று கேள்வி எழுப்பினார்.
ஸ்மிருதிக்கு பிரியங்கா பதில்
ராகுலை எதிர்த்து பலரும் இங்கே போட்டி போடத்தான் வந்திருக்கிறர்கள்.. ஆனால் எங்களது இதயம் எப்போதும் அமேதியைத்தான் நேசிக்கும் என்ற கையோடு, சாந்தினிசவுக் தொகுதியில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி அந்த தொகுதி பக்கமே அதன் பின்னர் திரும்பியே பார்க்கவில்லை என்று குற்றம்சாட்டினார். மேலும் நாங்கள் ஒருபோதும் அமேதி தொகுதி மக்களைக் கைவிட்டதே இல்லை என்றார் பிரியங்கா.
நாடகம் எது? உண்மை எது?
அத்துடன் அமேதி தொகுதி மக்களுக்கு "உண்மை எது? நாடகம் எது?" என்பது நன்றாகவே தெரியும் என்றும் சாடினார். ஸ்மிருதி இரானி தொலைக்காட்சி நாடக நடிகை என்பதால் இப்படி பிரியங்கா பேசினார்.
விடாத ஸ்மிருதி
இதற்கும் விடுவதாக இல்லை ஸ்மிருதி.. கடந்த இரண்டரை ஆண்டுகாலம் நான் எம்.பி.யாக இருந்து நாடாளுமன்றத்தில் செயல்பட்டதையும் ராகுல் காந்தியின் செயல்பாட்டையும் ஒப்பிட்டு பேச முடியுமா? இங்கே யார் நாடகம் போடுகிறார்கள் என்பதை மக்களே அறிவர் என்று பதிலடி கொடுத்தார்.
ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொரு அக்கப்போர்தான்!!