அணைகளில் நீர்மட்டம் கிடுகிடு குறைவு.. பெங்களூரில் 3 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் சப்ளை
பெங்களூர்: காவிரிக்கு குறுக்கே அமைக்கப்பட்டுள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கட்டில் தண்ணீர் வற்றிப்போயுள்ளதால், பெங்களூரில் 3 நாட்களுக்கு ஒருமுறைதான் மாநகராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என மேயர் பத்மாவதி கூறியுள்ளார்.
124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ் அணையில், அக்டோபர் இறுதி நிலவரப்படி 76.9 அடிதான் தண்ணீர் உள்ளது (கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் தண்ணீர் இருப்பு 104.58 அடியாக இருந்தது). கேஆர்எஸ் தண்ணீர் குடிநீர் தேவை, பாசன தேவை உள்ளிட்டவற்றுக்காக குறைந்தபடியே உள்ளது. தென்மேற்கு பருவமழை இந்த வருடமும் பொய்த்துவிட்டதால், இனிமேலும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழைக்கு வாய்ப்பில்லை. எனவே இந்த அணையை நம்பியுள்ள பெங்களூரின் குடிநீர் சப்ளை பெரிதும் பாதிக்கப்படும். அதுவும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க 3 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் சப்ளை செய்ய திட்டமிட்டுள்ளதாக பெங்களூர் மாநகராட்சி மேயர் பத்மாவதி கூறியுள்ளார். இந்த தகவலால் வெலவெலத்து போயுள்ளனர் பெங்களூர்வாசிகள்.