3300 உயிர்களை மீட்டவரை கலங்கடித்த வயநாடு! மீட்புக்குழு தந்த புதிய அப்டேட்!
வயநாடு: உடற்பாகங்கள் ஏதேனும் கிடைக்கின்றனவா என்று ஆற்றின் அடியில் உள்ள மணலை பொக்லைன் வைத்து அள்ளி சலித்துப் பார்த்தோம் என்று வயநாடு மீட்புக் குழுவில் ஈடுபட்ட ஈசன் தெரிவித்துள்ளார்.
வயநாடு மலைப் பகுதிகளில் அடுத்தடுத்து இரண்டு முறை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவுகளால் பூஞ்சேரி மட்டம், முண்டக்கை, மேப்பாடி, சூரல்மலா, வைத்திரி, வெள்ளரிமலா, பொத்துகலு ஆகிய பல மலைக் கிராமங்கள் மண்ணுக்குள் புதைந்தன. சுமார் 400க்கும் அதிகமான உயிர்கள் இந்த நிலச்சரிவில் உயிரிழந்துள்ளனர். அது மட்டுமல்லாமல் அடையாளம் தெரியாத நூற்றுக்கணக்கான உடற்பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்டோர் நிலை என்ன ஆனது என்பதே தெரியவில்லை.

வயநாடு நிலச்சரிவில் சிக்கித் தவிக்கும் மக்களைக் காப்பாற்றவும் அந்தப் பகுதியை மறுசீரமைக்கவும் தமிழ்நாட்டில் ஒரு குழு சென்றிருந்தது. கோவையைச் சேர்ந்த டெல்டா ஸ்குவாட் மீட்புக் குழுவைச் சேர்ந்த ஈசன் தலைமையில் மொத்தம் 15 பேர் சென்றிருந்தனர். ஈசன் இதுவரை 18க்கும் மேலான இயற்கை பேரிடர்களில் இறங்கி களத்தில் பணியாற்றி அனுபவம் பெற்றவர். இவரது பட்டியலில் வயநாடு 19வது இயற்கை சீற்றம். இவர் 2019இல் கோழிக்கோட்டில் நடந்த நிலச்சரிவில் இணைந்து பணியாற்றி இருக்கிறார்.
இவருடன் மதுரையைச் சேர்ந்த விக்னேஷ்வராவும் சென்றிருந்தார். இவர் புத்தகயாவில் உள்ள ஆபீசர் ட்ரெயிங் அகாதெமியில் சேர்ந்து படித்துவிட்டு விரைவில் ராணுவத்தில் பணிபுரிய இருக்கிறார். இவரது தந்தை ஒரு சாதாரண மெக்கானிக். அதேபோல் விக்னேஷ். இவர் காரைக்கால் என்சிசியில் இருந்து ராணுவத்திற்குத் தேர்வான முதல் வீரர். இவரது தந்தை கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றி வந்த போது சுவர் இடிந்துவிழுந்த விபத்தில் சிக்கி இறந்துவிட்டார். இப்படிப் பல இளைஞர்கள் இந்த மீட்புக் குழுவில் இணைந்து பணியாற்றி இருந்தனர்.
இந்தப் பேரிடர் மீட்புப் பணியில் பார்த்த சம்பவங்கள் குறித்து இவர்கள் மூவரும் ஒரு யூடியூப் தளத்திற்குப் பேட்டி அளித்துள்ளனர். வயநாடு மீட்புப் பணிபற்றி பேசிய ஈசன், "கன்னியாகுமரியில் மீனவர்களுக்கான பயிற்சி ஒன்றை நடத்திக் கொண்டிருந்தோம். அதை முடித்துவிட்டு மதுரை பயணம் செய்துகொண்டிருந்த போதுதான் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது என்ற செய்தி எனக்குக் கிடைத்தது.
இரவு பத்து மணிக்கு தேசிய பேரிடர் மீட்புக்குழுவைச் சேர்ந்த எனது உயர் அதிகாரி குறுஞ்செய்தி அனுப்பினார். உடனே போக முடியுமா? ரொம்ப கஷ்டம் என்று நான் சொன்னேன். வயநாடு சாதாரண நாட்களிலேயே போக முடியாது. அது ஒருவழிச் சாலை. ஆகவே தயக்கம் இருந்தது.
ஏனென்றார் 2018இல் நான் மீட்புப் பணிக்குப் போனேன். இடுக்கியில் எனக்குப் பணி. ஆனால், என்னால் பாதி தூரம்தான் போக முடிந்தது. அதன்பிறகு வழி இல்லை. அந்த முன் அனுபவம் இருந்ததால் மறுத்தேன். அவர் ஹெலிக்காப்டர் தருவதாகச் சொன்னார். அப்படி என்றால் போகிறேன் என்று சொன்னேன். எனது குழுவை ஒன்று சேர்க்க 12 மணி நேரம் அவகாசம் கேட்டேன்.
ஆனால், இரவு 11 மணிக்கு தகவல் சொன்னவுடன் 30 பேர் கொண்ட குழு காலை 8 மணிக்கு எல்லாம் வந்துவிட்டார்கள். அதன் பின்னர் ஹெலிகாப்டர் கிடைக்கவில்லை. தயாரான பிறகு பயணத்தை நிறுத்தக் கூடாது என்று சாலை மார்க்கமாகவே பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டு 6 மணிநேரத்தில் வயநாடு போனோம்.
எங்களைப் பொறுத்தவரை இந்தப் பேரிடரிலிருந்து ஒருவரையாவது உயிருடன் மீட்க வேண்டும் என்பதுதான் லட்சியமாக இருந்தது. கை கால் போனால்கூட பரவாயில்லை. உயிருடன் மீட்டால் போதும் என நினைத்தோம். இதுவரை பல இயற்கை பேரிடரிலிருந்து எங்கள் குழு 3300 உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறது. அப்படி வயநாட்டில் ஒரு உயிரையாவது காப்பாற்றி விடமாட்டோமா என நினைத்தோம். அந்த வாய்ப்பு துரதிருஷ்டவசமாகக் கிடைக்கவில்லை. கிடைத்தவரைப் பல உடல் பாகங்களை தனித்தனியாகக் கண்டு எடுத்தோம். அதை பேக் செய்து அனுப்பினோம். ஏதோ ஒரு உடல் பாகம்தானே என்று அலட்சியம் காட்டாமல் மரியாதையாகச் செய்தோம்.
ஒரு இடத்தில் பல மின்கம்பங்கள் முறிந்து விழுந்திருந்தன. அதைத் தாண்டி நீரில் போவது ஆபத்தாக இருந்தது. ஒருவேளை அதில் மின்சாரம் இருந்தால் அவ்வளவுதான். தண்ணீர் போகும் வேகத்தில் நாங்கள் ஆற்றின் உள்ளே இறங்கும்போது வேகமாக இழுத்துப் போய் மின்கம்பத்தில் மோதிவிடும் ஆபத்தும் இருந்தது. கொஞ்சம் தவறினால் நாங்களே அடித்துப் போய் அணையில் தள்ளப்படுவோம் என்ற நிலை இருந்தது.
பூஞ்சேரி மட்டம் தொடங்கி முண்டக்கை தாண்டினால் வயநாடு அருகில் அணை வரும். அந்த அணையில் 6 அடிக்கு மேல் மணல். அதற்குள் உள்ளே போய் உடல் உள்ளதா எனத் தேட வேண்டும். இவை எல்லாம் சவாலான பணி. எங்களுக்கும் விபத்து ஏற்பட்டுவிடக் கூடாது.
பல கட்ட ஆய்வுக்குப் பின்னர் கயிறு கட்டி ஆற்றைக் கடந்துபோனோம். ஆற்றில் உள்ள மணலை பொக்லைன் வைத்து அள்ளி அள்ளி சலித்துப் பார்த்தோம். உடல் உறுப்புகள் ஏதேனும் தென்படுகிறதா? என இரண்டு பேர் தனியே அதைக் கண்காணித்தனர். சில இடங்களில் பெட், போர்வை இருந்தால் அந்த இடத்தை தோண்டி பார்க்கச் சொல்லி யோசனை கொடுத்தனர்.
இரவு தூங்கும்போதுதான் நிலச்சரிவு வந்தது. ஆகவே, அப்படி ஒரு யோசனை சொன்னார்கள். அதேபோல் ஸ்கூல் பேக் எங்காவது தென்பட்டால் அதை உடனே எடுத்து ஆராய்ந்து பார்த்தோம். அதன் கீழ் ஏதாவது உடல் கிடைக்கிறதா எனத் துழாவினோம். எனது டீம் கடுமையான நேரத்திலும் சோர்வு இல்லாமல் உழைத்தது. அதுவே எங்களின் வெற்றி" என்கிறார்.












Click it and Unblock the Notifications