2024 லோக்சபா தேர்தலை இணைந்து சந்திப்போம் - காங்கிரஸ் கட்சிக்கு மமதா பானர்ஜி அழைப்பு
காங்கிரஸ் கட்சி விரும்பினால் 2024ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலை இணைந்து சந்திக்கலாம் என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.
கொல்கத்தா: ஐந்து மாநில தேர்தல் முடிவுகளைக் கண்டு சோர்ந்து போய் விட வேண்டாம் என்றும் அதை நேர்மறையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி விரும்பினால் நாம் அனைவரும் இணைந்து லோக்சபா தேர்தலை சந்திக்கலாம் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி 90 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
இந்த 5 மாநில சட்டசபைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த தோல்வியால் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் சோர்வடைந்து போயுள்ளனர். மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்வதாக ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் தங்களின் ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.
இந்த சட்டசபைத் தேர்தல் முடிவுகள் 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கான முன்னோட்டம் என்று அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர். பாஜகவிற்கு எதிராக எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்தால் மட்டுமே மிகப்பெரிய வெற்றியைப் பெற முடியும் என்றும் அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தேர்தல் வெற்றி குறித்து கருத்து கூறியுள்ள மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜி, இந்த தேர்தல் தோல்வியைக் கண்டு சோர்வடைய வேண்டாம் எனவும் நேர்மறையாக நினைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி விரும்பினால் 2024ஆம் ஆண்டு நாம் அனைவரும் இணைந்து போட்டியிடலாம் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த தேர்தல் முவுகள் 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலின் தலைவிதியை நிர்ணயம் செய்யாது என்றும் அப்போது மக்களின் மனநிலைமை மாறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்தால் அது பாஜகவிற்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.