நீங்கள் உள்ளே வர கூடாது.. கலவரம் நடக்கும்.. ஸ்ரீநகரில் தடுத்து நிறுத்தப்பட்ட குலாம் நபி.. திடுக்!
காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் ராணுவத்தினரால் தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கிறார்.
ஸ்ரீநகர்: காஷ்மீர் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் ராணுவத்தினரால் தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கிறார்.
காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. அது மட்டுமில்லாமல் ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து உள்ளது. இதனால் தற்போது காஷ்மீர் பிரச்சனை உச்சகட்ட பரபரப்பில் சென்று கொண்டு இருக்கிறது.
காஷ்மீரில் ஏற்கனவே இந்திய ராணுவம் தொடர்ந்து குவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காவல்
முக்கியமான அரசியல் தலைவர்கள் எல்லோரும் அங்கு வீட்டு காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள். முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, பருக் அப்துல்லா, உமர் அப்துல்லா ஆகியோர் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். இதனால் அங்கு தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.
மோசம்
அதே போல் ராணுவமும் மொத்தமாக எல்லா தெருக்கள், வீடுகள் முன்பும் குவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் தற்போதுதான் காங்கிரஸ் கட்சி தனது கவனத்தை செலுத்த தொடங்கி உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் மற்றும் ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் குலாம் அஹமது மீர் ஆகியோர் ஸ்ரீநகர் மக்களை சந்திக்க திட்டமிட்டனர்.
காங்கிரஸ் கட்சி
ஸ்ரீநகர் மக்களை சந்தித்து அவர்களிடம் கருத்து கேட்க குலாம் நபி ஆசாத் மற்றும் ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் குலாம் அஹமது மீர் திட்டமிட்டனர். ஆனால் ஸ்ரீநகர் விமானம் நிலையம் வந்த இரண்டு பேரையும் ராணுவத்தினர் காஷ்மீருக்குள் அனுமதிக்கவில்லை. விமான நிலையத்திலேயே அவர்கள் வைக்கப்பட்டுள்ளனர்.
என்ன காரணம்
இதற்கு காரணம் சொன்ன ராணுவத்தினர், காஷ்மீருக்குள் நீங்கள் செல்ல கூடாது. அப்படி சென்றால் காஷ்மீரில் புரட்சி வெடிக்க வாய்ப்புள்ளது. கலவரம் கூட நடக்கும். இப்போது அங்கு 144 தடை இருப்பதால் உங்களை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளது.