மம்தா பானர்ஜி கேட்டதால்தான் சட்டசபையை முடக்கினேன்.. முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஜெகதீப் பதில்!
மேற்கு வங்கம்: முதல்வர் மம்தா கேட்டுக் கொண்டதால் சட்டசபை முடக்கம்.. முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் விளக்கம்
கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் கோரிக்கையை ஏற்று சட்டசபை முடித்து வைக்கப்பட்டது என முதல்வர் ஸ்டாலினுக்கு அந்த மாநில ஆளுநர் ஜெகதீப் தன்கர் பதிலளித்துள்ளார்.
மேற்கு வங்க அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் புதிய திருப்பமாக ஆளுநர் ஜக்தீப் தன்கர் நேற்றைய தினம்
மேற்கு வங்க சட்டசபையை முடக்கியுள்ளார்.
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 174 அடிப்படையில் மேற்கு வங்க சட்டசபை பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் காலவரையறையின்றி முடக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. மேற்கு வங்க சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னதாக முடக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் ஜெகதீப்
வரும் சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக திரிணாமூல் காங்கிரஸ் தலைமை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில் மேற்கு வங்க சட்டசபையை ஆளுநர் முடக்கிய செயல் விதிமுறைகள் மற்றும் மரபுகளுக்கு எதிரானது.

முன்மாதிரி
அரசியலமைப்புச் சட்டத்தை நிலைநிறுத்த மாநிலத்தின் தலைவர் முன்மாதிரியாக இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை கொடுப்பதில்தான் ஜனநாயகத்தின் அழகே உள்ளது என தனது கண்டனத்தை பதிவு செய்தார். இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டை மேற்கு வங்க ஆளுநர் மறுத்துள்ளார்.

திரிணாமூல் காங்கிரஸ்
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் கடந்த 11ஆம் தேதி மாலை மேற்கு வங்க சட்டசபை விவகாரங்கள் துறை அமைச்சரவையில் இருந்து அடுத்த சட்டசபை கூட்டத் தொடர் மார்ச் 2 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எனவே திரிணாமூல் காங்கிரஸ் அரசு கேட்டுக் கொண்டதன் பேரில் சட்டசபையை முடித்து வைக்க உத்தரவிட்டேன்.

உண்மை நிலவரத்துடன்
தமிழக முதல்வர் ஸ்டாலினின் கடுமையான அவதானிப்புகள் உண்மை நிலவரத்துடன் ஒத்து போகவில்லை. உண்மையை உறுதி செய்து கொள்ளாமல் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்த கருத்துகள் மனதை புண்படுத்தும்படி உள்ளது. இத்துடன் சட்டசபையை முடித்து வைக்க கோரி மாநில அரசு அனுப்பிய கடிதத்தின் நகலை வைத்துள்ளேன் என மேற்கு வங்க ஆளுநர், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பதில் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications