அப்பாவையா கைது பண்றீங்க...உங்க சைக்கிள் வேணாம்...அரசின் இலவச சைக்கிள் வாங்க மறுத்த பாஜக தலைவர் மகள்!
கொல்கத்தா: மேற்கு வங்க மாணவி ஒருவர் அரசு சார்பில் பள்ளியில் வழங்கிய இலவச சைக்கிளை பெற மறுத்து விட்டார்.
பாஜக தலைவரான அவரது தந்தை கைது செய்யப்பட்டதற்காக, தனது எதிர்ப்பை பள்ளியில் பதிவு செய்துள்ளார்.
தந்தையின் தூண்டுதலின் பேரில் அந்த மாணவி சைக்கிளை பெற மறுத்ததாக உள்ளூர் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர்.
மேற்கு வங்க அரசின் இலவச சைக்கிள்
மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு ஆளும் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே மோதல் நடப்பது வாடிக்கையாகி விட்டது. பாஜகவினர் மீது ஆளுங்கட்சியினர் பொய் வழக்கு போட்டு வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நிலையில் பிர்மம் மாவட்டத்தில் ஒரு பள்ளியில் அரசு சார்பில் இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.
பள்ளி மாணவி மறுப்பு
அப்போது அந்த பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தனக்கு வழங்கப்பட்ட இலவச சைக்கிளை பெற மறுத்துவிட்டார். அவரது தந்தை பாஜக தலைவர் ஆவார். தனது தந்தை கைது செய்யப்பட்டதற்காக, அவரது மகள் அரசாங்கம் மீதான தனது எதிர்ப்பை பள்ளியில் பதிவு செய்துள்ளார். தன் தந்தை மீது போலீசார் பொய் வழக்கு போட்டு அவரை கைது செய்திருப்பதாக அந்த மாணவி கூறினார்.
சைக்கிள் திருப்பி அனுப்பினோம்
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் கூறுகையில், '9 மற்றும் 10ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு அரசாங்கம் சார்பில் வெள்ளிக்கிழமையன்று இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது. உள்ளூர் பாஜக தலைவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து, அவரது மகள் சைக்கிளை பெற மறுத்தார். இதுபற்றி உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து, சைக்கிளை திருப்பி அனுப்பினோம்' என்றார்.
தந்தை தூண்டுதல்
இது தொடர்பாக அந்த மாணவி கூறுகையில், 'என் தந்தை, போலீஸ் காவல் மற்றும் நீதிமன்ற காவலில் இருந்தபோது நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டோம்' என்றார். மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், தந்தையின் தூண்டுதலின் பேரில் அந்த மாணவி சைக்கிளை பெற மறுத்ததாக உள்ளூர் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர்.