ஒரே மாதம்.. 4 சம்பவம்.. மோடி & அமித் ஷா ஜோடிக்கு சவால் விடும் மமதா.. "பி.எம்" என கொண்டாடும் வங்கம்!
கொல்கத்தா: மேற்கு வங்க அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான மோதலில் கடந்த 1 மாதத்தில் மட்டும் ஏகப்பட்ட சம்பவங்கள் நடந்துவிட்டன. அதிலும் 4 முக்கியமான சம்பவங்கள் பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு பெரிய நெருக்கடியை கொடுத்துள்ளது.
Recommended Video
மிஸ்டர் பிரதமரே.. மிஸ்டர் மன் கி பாத் பிரதமரே.. என்னுடைய கதையை முடிக்கலாம் என்று நினைக்கிறீர்களா? முடியாது.. என்னுடைய கதையை உங்களால் ஒரு போதிலும் முடிக்க முடியாது. எனக்கு பயம் இல்லை. எங்களுக்கு பயம் இல்லை.
ஆக்ஸிஜன் 90-க்கு கீழ் இருந்தால் மட்டுமே சிகிச்சை- அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள்
முடிந்தால் செய்து பாருங்கள்.. ஒவ்வொரு மாநிலமும் என்னுடன் நிற்கும்.. இது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று செய்தியாளர் சந்திப்பில் சொன்னது. ஆம் மாநில முதல்வர் ஒருவர் பிரதமருக்கு நேரடியாக சவால் விடும் அளவிற்கு பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. எப்படி என்னதான் நடந்தது?
என்ன நடந்தது
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேசிய அளவில் மிகப்பெரிய குரலாக உருவெடுத்து வருகிறார். எதிர்க்கட்சியான காங்கிரஸ் வலுவாக இல்லாத நிலையில், மம்தா பானர்ஜி வலுவான தலைவராக உருவெடுத்துக்கொண்டு இருக்கிறார். அதிலும் மோடி, அமித் ஷாவை நேரடியாக எதிர்ப்பது, அவர்களின் பாணியிலேயே அவர்களுக்கு பதிலடி கொடுப்பது என்று மமதா பானர்ஜியின் அரசியல் ஸ்டைல் பாஜகவை லேசாக ஜெர்க் ஆக வைத்துள்ளது.
4 சம்பவம்
மேற்கு வங்கத்தில் நடந்த 4 முக்கியமான சம்பவங்கள்தான் இந்த மோதலை பெரிதாக்கி உள்ளது. முதல் விஷயம் மேற்கு வங்க சட்டசபை தேர்தல் முடிவுகள். இந்த சட்டசபை தேர்தலில் எப்படியும் வென்றுவிடுவோம் என்று உறுதியாக நம்பிய பாஜகவிற்கு தேர்தல் முடிவுகள் பெரிய சவுக்கடியாக் அமைந்தது. மம்தா ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரலாம், தொங்கு சட்டசபையாவது கண்டிப்பாக உருவாகும் என்று உறுதியாக நம்பிய பாஜகவிற்கு தேர்தல் முடிவுகள் மாபெரும் ஏமாற்றத்தை கொடுத்தது.
ஏமாற்றம்
போன 2016 தேர்தலை விட 2 இடங்களில் கூடுதலாக வென்று 213 இடங்களோடு மாபெரும் ஆட்சியை அமைத்து மம்தா பானர்ஜி அமித் ஷாவின் ராஜதந்திரத்திற்கும், பிரதமர் மோடியின் "ஓ தீதி ஓ தீதி" விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்தார். ஆனால் இது தொடக்கம்தான் ஆட்சிக்கு வந்தவுடனே தொடர்ந்து பாஜகவிற்கு எதிராக மம்தா வலுவாக காய்களை நகர்த்தி வந்தார்.
பாஜக
மத்திய பாஜக அரசும் சும்மா இல்லை. உடனே சிபிஐயை அனுப்பி, நாரதா கேஸில் 4 டிஎம்சி எம்எல்ஏக்களை கைது செய்தது. ஆனால் மம்தாவும் விடுவதாக இல்லை. என் எம்எல்ஏக்களை கைது செய்ய வேண்டும் என்றால் என்னை முதலில் கைது செய்யுங்கள் என்று நேராக சிபிஐ அலுவலகத்திற்கே சென்று சவால் விடுத்தார். 6 மணி நேரம் சிபிஐ அலுவலகத்திலேயே நின்று மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். எளிதாக எம்எல்ஏக்கள் மீது கேஸ் போட்டு, அவர்களை மற்ற மாநிலங்களில் கட்சி மாற வைத்து போல இங்கே மாற வைக்க முடியாது என்று மம்தா அமித் ஷாவிற்கு பாடம் எடுத்தார்.
யாஸ்
அதன்பின் யாஸ் புயல் தொடர்பான ஆலோசனை கூட்டத்திலும் மத்திய பாஜக அரசுக்கு மம்தா பானர்ஜி இன்னொரு சவால் விடுத்தார். பிரதமர் மோடி நடத்திய ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் டிஎம்சி உறுப்பினரும் தற்போதைய பாஜக எம்எல்ஏவுமான சுவேண்டு அதிகாரி அழைக்கப்பட்டு இருந்தார். ஒரு பிஎம் - சிஎம் மீட்டிங்கில் பாஜக எம்எல்ஏவிற்கு என்ன வேலை என்று கேள்வி கேட்ட மம்தா.. சுயமரியாதையே முக்கியம் என்று கூறி, மீட்டிங்கையே புறக்கணித்துவிட்டு கிளம்பி சென்றார்.
20 நிமிடம்
அதிலும் பிரதமர் மோடியை நேராக சந்தித்து.. மீட்டிங்கிற்கு வர முடியாது என்று கூறினார். இதில் மமதாவை சந்திக்க மோடி 20 நிமிடம் காத்திருந்தது வேறு கதை. 3 சம்பவங்கள் இப்படி அடுத்தடுத்து நடக்க நேற்று நடந்ததுதான் உச்சபட்ச மோதல். யாஸ் புயல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் மம்தா கலந்து கொள்ளாத விஷயம் சர்ச்சையான நிலையில், கோபம் கொண்ட மத்திய அரசு மேற்கு வங்க தலைமை செயலாளர் ஆலன் பந்தோபத்யாயை மத்திய அரசு டெல்லிக்கு அழைத்தது.
மத்திய அரசு
இவரை மாநில பணியில் இருந்து விடுவித்து மத்திய பணிக்கு அனுப்பி வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. அதோடு இன்றே தலைமை செயலாளர் ஆலன் பந்தோபத்யா டெல்லி உள்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்றும் குறிப்பிட்டது. ஆலன் பந்தோபத்யா நேற்றுடன் ஓய்வு பெற வேண்டும். ஆனால் அவருக்கு 3 மாதம் நீட்டிப்பு வழங்கப்பட்டு இருந்தது.
முடியாது
இப்படிப்பட்ட நிலையில்தான் இன்றே டெல்லிக்கு ஆலன் பந்தோபத்யா திரும்ப வேண்டும் என்று மத்திய அரசு செக் வைத்தது. ஆனால் முதல்வர் மம்தா பானர்ஜி, ஆலன் பந்தோபத்யாவை டெல்லிக்கு அனுப்ப முடியாது. இங்கு கொரோனா, யாஸ் புயல் என்று நிலைமை சரியில்லை. என்ன நடந்தாலும் ஆலன் பந்தோபத்யாவை டெல்லிக்கு அனுப்பி முடியாது. என்ன செய்ய வேண்டுமோ செய்யுங்கள் என்று, ஆலனை டெல்லிக்கு அனுப்பவே முடியாது என்று மம்தா உறுதியாக இருந்தார்.
நடவடிக்கை
இவர் ஐஏஎஸ் அதிகாரி என்பதால் மத்திய அரசு இவர் மீது நடவடிக்கை எடுக்கும் திட்டத்தில் இருந்தது. ஆனால் மம்தா இங்குதான் தனது அரசியல் ராஜதந்திரத்தை வெளிப்படுத்தினார். ஐஏஎஸ் பணியை நீட்டித்தால் தானே அவரை டெல்லிக்கு அழைப்பீர்கள், இப்போ பாருங்க என்று கூறி, ஆலனை மம்தா ஓய்வு பெற வைத்தார். ஆலன் பந்தோபத்யா நேற்று திடீரென ஓய்வு பெற்றார்.
ஓய்வு
மூன்று மாதம் இவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு இருந்த நிலையில் அதை ஏற்றுக்கொள்ளாமல் அவர் ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற ஆலன் பந்தோபத்யா மம்தா பானர்ஜியின் தனிப்பட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். எப்படியாவது இவரை டெல்லிக்கு மாற்றி, மம்தாவை அவமதிக்காமல் என்று நினைத்த மத்திய அரசுக்கும் மம்தா பதிலடி கொடுத்தார். இப்படி ஒரே மாதத்தில் 4 அடுத்தடுத்த சம்பவங்கள் மூலம் மத்திய பாஜக அரசுக்கு மம்தா கடும் நெருக்கடி கொடுத்துள்ளார்.
கொண்டாட்டம்
மம்தாவின் இந்த தொடர் நடவடிக்கைகள் தேசிய அளவில் அவரை தலைவராக, எதிர்க்கட்சிகளின் முகமாக உயர்த்திக்கொண்டு இருக்கிறது. இவரை மேற்கு வங்க மக்களும் இப்போதே பிரதமர் என்று கொண்டாட தொடங்கிவிட்டனர். #BengaliPrimeMinister டேக் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. மேற்கு வங்க மக்கள் மட்டுமின்றி தேசிய அளவில் பல மாநில மக்கள் இதை டிரெண்டு செய்து வருகிறார்கள். மம்தாவும் எதிர்க்கட்சி கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக 2024ல் நிறுத்தப்படுவாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.