சிதைக்கப்பட்ட 'நாகாலாந்து நாடு'.. சட்டசபை தேர்தல் புறக்கணிப்பின் பின்னணியில் 70 ஆண்டுகால 'யுத்தம்'
சட்டசபை தேர்தல் புறக்கணிப்புக்காக காரணமான நாகாலாந்து பிரச்சனைதான் என்ன? 70 ஆண்டுகால வரலாற்றை அலச வேண்டும்.
Recommended Video
கோஹிமா: நாகலாந்து சட்டசபை தேர்தலை புறக்கணிக்கப் போவதாக பிரதான கட்சிகள் அறிவித்திருப்பது அம்மாநிலத்தில் பெரும் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகாலாந்து தனிநாடு கோரும் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி இந்த தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நாகாலாந்து தனிநாடு கோரும் விவகாரத்தின் பின்னணிதான் என்ன? நாகாலாந்தில் 17 பெரிய பழங்குடி இனம், 20 சிறிய பழங்குடி இனத்தினர் வசிக்கின்றனர். அங்காமி, செம, லோதா, மாவோ, கோன்யாக், ரெங்மா போன்றவை பெரிய பழங்குடி இனம். ஒவ்வொரு இனத்தவரும் ஒவ்வொரு மொழி பேசுகிறவர்களாக இருக்கின்றனர். திபெத்-பர்மிய மொழிக்குழுவைச் சேர்ந்தவை இம்மொழிகள்.
ஆங்கிலேயர்களால் 1826-ம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவுடன் அஸ்ஸாம் இணைக்கப்பட்டது. நாகா மலைபிரதேசங்கள் 1881-ம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவுடன் இணைக்கப்பட்டன. ஆனால் இதை எதிர்த்து 1918-ம் ஆண்டு கிளர்ச்சி தொடங்கியது. 1929-ம் ஆண்டு இந்தியா வந்த சைமன் கமிஷனிடம் தங்களது பிரதேசங்களை முன்னைப் போல தனிநாடாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.
காந்தி ஆதரவு
1946-ம் ஆண்டு நாகா தேசிய கவுன்சில் ஒன்று பிசோ தலைமையில் உருவாக்கப்பட்டது. 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ந் தேதி நாகாலாந்து தனிநாடு பிரகடனம் வெளியிடப்பட்டது. இதற்கு மகாத்மா காந்தியும் ஆதரவு தெரிவித்திருந்தார்.
மக்கள் முழு ஆதரவு
1951-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்புதலுடன் தனிநாட்டுக்கான வாக்கெடுப்பு நாகாலாந்தில் நடத்தப்பட்டது. 99% மக்கள் நாகாலாந்து தனிநாடாக ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். ஆனால் இதை இந்திய அரசு ஏற்கவில்லை.
வங்கதேசத்தில் இருந்து..
இதனால் 1952-ம் ஆண்டு நாகாலாந்து தலைவர் பிசோ, நாகா கூட்டரசாங்கத்தையும் நாகா கூட்டு ராணுவத்தையும் உருவாக்கினார். பிசோ, வங்கதேசத்தில் (அன்றைய கிழக்கு பாகிஸ்தான்) இருந்து கொண்டு இந்த அரசு மற்றும் ராணுவத்தை உருவாக்கினார். 1952-ம் ஆண்டு இந்திய ராணுவம் நாகலாந்து மீது படையெடுத்து ஆக்கிரமித்தது.
புதிய மாநிலமாக உதயம்
1958-ம் ஆண்டு ராணுவத்தினருக்கு அதிகாரம் தரும் ஆயுத படைச் சட்டம் அங்கு அமல்படுத்தப்பட்டது. அஸ்ஸாமின் ஒரு மாவட்டமாக இணைக்கப்பட்ட நாகாலாந்து, 1963-ம் ஆண்டு தனி மாநிலமாகியது. இதன்பின்னர் ஜெய்பிரகாஷ் நாராயணனை உள்ளிட்டக்கிய அமைதி பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டது.
அமைதிப் பேச்சுகள்
ஆனால் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதை எதிர்த்து வன்முறைகள் நீடித்ததால் அமைதி முயற்சிகள் கைவிடப்பட்டன. நாகாலாந்து தனிநாடு கோரி ஆயுதப் போராட்டம் நடந்த நிலையில் 1975-ம் ஆண்டு நாகாலாந்து தேசிய கவுன்சிலின் ஒரு பிரிவினர் அமைதிப் பாதைக்கு திரும்பினர்.
தேசிய சோலிஸ்ட் கவுன்சில்
மத்திய அரசுடன் ஷில்லாங் ஒப்பந்தத்தில் கையெழுத்தினர். அதேநேரத்தில் சீனா ஆதரவுடன் இயங்கிய குழுக்கள், இதனை நிராகரித்து நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் எனும் புதிய இயக்கத்தைத் தொடங்கின.
புதிய பிரிவுகள்
நாகலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் தலைவர்களாக மூய்வா, கப்லாங் இருந்தனர். 1988-ம் ஆண்டு நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் மூய்வா, கப்லாங் பிரிவுகளாக பிளவுபட்டன. நாகா இனமக்கள் வாழும் அனைத்து பகுதிகளையும் ஒருங்கிணைத்து நாகாலிம் என்கிற தனிநாடு அமைக்க வேண்டும் என்பதுதான் இந்த அமைப்புகளின் கோரிக்கை.
மத்திய அரசுடன் பேச்சு
நாகா இனமக்கள் வாழும் அஸ்ஸாம், அருணாசலபிரதேசம், மணிப்பூர் மாநில பகுதிகளை நாகாலாந்து மாநிலத்துடன் இணைக்க வேண்டும் என 1964, 1970, 1994, 2003-ம் ஆண்டுகளில் அம்மாநில சட்டசபையில் ஏகமனதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 1990கள் முதலில் நாகாலாந்து தனிநாடு கோரும் தலைவர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
நேரடி பேச்சுவார்த்தை
தாய்லாந்து, பாங்காங், பாரீஸ் நகரங்களில் முன்னாள் பிரதமர் நரசிம்மராவ், தேவகவுடா, வாஜ்பாய் ஆகியோர் நாகாலாந்து தனிநாடு கோரும் தலைவர்களுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளையும் நடத்தினர். 1997-ம் ஆண்டு நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சிலின் மூய்வா அமைப்பு மத்திய அரசுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 2001-ம் ஆண்டு கப்லாங் பிரிவும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால் அண்மையில் கப்லாங் பிரிவு அமைதி ஒப்பந்தத்தை நிராகரித்தது. இப்படி சுமார் 70 ஆண்டுகாலத்துக்கும் மேலாக நீடிக்கும் நாகாலாந்து பிரச்சனைக்கு தீர்வு காண கோரிதான் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் புறக்கணிப்பு எனும் ஆயுதத்தை ஏந்தியிருக்கின்றன.