25 நிமிடத்தில் 23 கேள்விகள் கேட்ட மும்பை போலீஸ்: திணறிப் போன ராதே மா
மும்பை: சர்ச்சை சாமியார் ராதே மாவிடம் மும்பை போலீசார் 25 நிமிடங்களில் 23 கேள்விகள் கேட்டுள்ளனர்.
மும்பையைச் சேர்ந்த நிக்கி குப்தா(32) என்பவர் பெண் சாமியார் ராதே மா மீது போலீசில் வரதட்சணை கொடுமை புகார் அளித்தார். ராதே மாவின் தூண்டுதலின்பேரில் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் தன்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக அவர் புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.
இது குறித்து போலீசார் ராதே மா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே அவர் மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகி முன்ஜாமீன் பெற்றுள்ளார்.
விசாரணை
மும்பை கந்திவாலி காவல் நிலையத்தில் வைத்து போலீசார் ராதே மாவிடம் புதன்கிழமை விசாரணை நடத்தினர். 25 நிமிடங்கள் விசாரணை நடந்தது. அப்போது போலீசார் ராதே மாவிடம் 23 கேள்விகள் கேட்டனர்.
இல்லை
போலீசார் தெரிவித்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஏற்க மறுத்துள்ளார் ராதே மா. தான் யாரையும் வரதட்சணை கேட்குமாறு தூண்டிவிடவில்லை என்று கூறியுள்ளார்.
வீடு
போலீசார் ராதே மாவின் சொந்த ஊர் எது என்று கேட்டனர். அதற்கு அவர் தனக்கு பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் வீடு உள்ளது என்றும், அது தன் பெயரில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த நாட்டில் தன் பெயரில் எந்த சொத்தும் இல்லை என்றுள்ளார்.
பக்தர்கள்
தனது பக்தர்களிடம் தனக்கு பணம், அழகுசாதனப் பொருட்கள், நன்கொடை அளிக்குமாறு கேட்டதே இல்லை என்று ராதே மா கூறியுள்ளார். உங்கள் பாஸ்போர்ட் எங்கே
என்று கேட்டதற்கு, எடுத்து வர மறந்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளார் ராதே மா.
மௌனம்
விசாரணையின்போது நிக்கி குப்தாவை தனக்கு தெரியும் என்பதை ராதே மா ஒப்புக் கொண்டார். நிக்கி மீது உங்களுக்கு ஏன் கோபம், ஏன் பிரச்சனையை தீர்க்க முயற்சி செய்யவில்லை என்று கேட்டதற்கு ராதே மா 2 நிமிடங்கள் மௌனமாக இருந்துவிட்டு அப்படி தான் என்றார்.
மகன்கள்
எனக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஒருவர் புனேவிலும், மற்றொருவர் மும்பையிலும் வசித்து வருகிறார்கள். அவர்களின் மனைவிகள் பெயர் மேகா மற்றும் மனிஷா. நிக்கி குப்தா டாடி என்று கூறிய நபர் வேறு யாரும் இல்லை என் கணவர் தான் என்றுள்ளார் ராதே மா.