தலைவராக 3 வருஷம் முடிஞ்சாச்சு.. அமித் ஷாவோட அடுத்த டார்கெட்?
டெல்லி: பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தலைவர் பதவிக்கு வந்து 3 வருடங்களை முடித்துள்ளார். அடுத்த கட்டத்தை நோக்கி இனி அவர் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலை நோக்கியே அமித் ஷாவின் அடுத்தடுத்த பயணங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. 2019 தேர்தலில் மோடி வெற்றி பெற்றால் அப்போது அமித் ஷாவின் பங்களிப்பு எந்த அளவில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் இப்போதே எழுந்து விட்டது.
2014ம் ஆண்டு ஜூலை 9ம் தேதி பாஜக தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டார் அமித் ஷா. அதன் பிறகு பாஜக பெற்ற வெற்றிகள் ஏராளம். கட்சித் தலைவரான பின்னர் 2014ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி அவர் பாஜக நாடாளுமன்றக் குழுத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
வேறு லெவல்
அமித் ஷா அடுத்து வேறு லெவலுக்கு உயர்வார் என்று இப்போதே கட்சியினர் கூறத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மோடி வெற்றி பெற்றால் அமித் ஷாவுக்கு அமைச்சரவையில் முக்கிய இடம் கிடைக்கும் என்று பேசப்படுகிறது. குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது அமித் ஷாதான் போலீஸ் துறை அமைச்சராக இருந்தார் என்பது இந்த நேரத்தில் நினைவில் கொள்ளப்பட வேண்டியதாகும்.
மோடியின் வாரிசு
எனவே அமித் ஷாவை எம்.பியாக்கியிருப்பதை மோடிக்கு அடுத்து பிரதமர் பதவிக்கு கொண்டு வருவதற்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. ராஜ்யசபா மூலமாக நாடாளுமன்றத்தில் நுழைந்து அவை நடவடிக்கைகளை அறிந்து கொண்டால், மோடிக்கு அடுத்து பிரதமர் பதவியில் அமித் ஷா அமர வசதியாக இருக்கும் என்று கருதியே இந்த ஏற்பாடு என்றும் கூறப்படுகிறது.
2025ல் பிரதமர்?
அனேகமாக 2025ம் ஆண்டு அமித் ஷா பிரதமர் பதவியில் அமரலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அப்போது மோடிக்கு 75 வயதாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குள்ளாக அமித் ஷாவை தயார்படுத்த பாஜக இப்போதே களம் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
காங்கிரஸை முடிப்பாரா?
ஆனால் பிரதமர் பதவி குறித்தெல்லாம் இப்போதைக்கு அமித் ஷா நினைத்துப் பார்ப்பாரா என்பது தெரியவில்லை. அவரது முழுக் கவனமும் தேசிய அளவில் காங்கிரஸைக் காலி செய்ய வேண்டும் என்பது மட்டுமே. அந்த நோக்கில்தான் அவர் ஒவ்வொரு மாநிலமாக குறி வைத்து காய் நகர்த்தி வருகிறார்.
பாஜக பிறந்தபோது ஷாவுக்கு வயது 15
1980ம் ஆண்டு பாஜக உருவாக்கப்பட்டது. அப்போது அமித் ஷாவுக்கு வயது 15தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இருந்த பாஜக தலைவர்களிலேயே வயதில் மிகவும் இளையவர் அமித் ஷாதான். இதுவரை இருந்த தலைவர்களிலேயே இரும்புக் கரம் படைத்தவரும் அமித் ஷாதான். பாஜகவின் மிகவும் வெற்றிகரமான தலைவரும் இவர்தான்.
மக்கள் மத்தியில்
தொண்டர்களின் கட்சியாக இருந்த பாஜகவை இன்று மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கட்சியாக மாற்றியவர் அமித் ஷாதான். அவரது வியூகங்கள்தான் இன்றைக்கு பாஜகவை இந்த இடத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
பல ஜாதிகளிலும் ஆதரவு
முற்பட்ட வகுப்பினரின் கட்சியாக பார்க்கப்பட்ட பாஜகவை இன்று பிற ஜாதியினர் மத்தியிலும் கொண்டு சென்றவர் அமித் ஷாதான். தலித் சமூகத்தினரின் ஆதரவையும் கூட இக்கட்சி பெற முடிந்தது என்றால், அதற்கு அமித் ஷாவின் செயல்பாடுகள்தான் காரணம் என்பதில் சந்தேகம் இல்லை.
வரலாறு காணாத வெற்றிகள்
பாஜகவால் நினைத்துக் கூட பார்க்க முடியாத வெற்றிகளை அமித் ஷா காலத்தில் அது கண்டது. வட கிழக்கில் கிடைத்த வெற்றி அதில் முக்கியமானது. உ.பியில் அது ஆட்சியைப் பிடித்தது ஷாவின் உச்சகட்ட பெருமையாகும். மொத்தத்தில் மோடிக்கு அடுத்த நிலையில் அமித் ஷா வலுவாக வளர்ந்து நிற்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.