பாஸ்போர்ட் பெற சாதாரண மக்கள் அல்லாடுகையில் எளிதில் வாங்கிய சோட்டா ராஜன்
மும்பை: நிழல் உலக தாதா சோட்டா ராஜனுக்கு ஆஸ்திரேலியாவில் யாரோ இந்திய தூதரகத்தின் மூலம் இந்திய பாஸ்போர்ட் வாங்கிக் கொடுத்துள்ளனர்.
நிழல் உலக தாதா சோட்டா ராஜன் கர்நாடக மாநிலம் மாண்டியாவைச் சேர்ந்த மோகன் குமார் என்ற பெயரில் வழங்கப்பட்ட இந்திய பாஸ்போர்ட்டில் இந்தோனேசியா சென்றபோது தான் குடியேற்றத் துறை அதிகாரிகளால் பாலியில் கைது செய்யப்பட்டார்.
ராஜன் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் விண்ணப்பித்து பாஸ்போர்ட் பெற்றுள்ளார். அவருக்கு கடந்த 2008ம் ஆண்டு ஜூலை மாதம் 8ம் தேதி புதிய பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தான் வைத்திருந்த பாஸ்போர்ட் தொலைந்துவிட்டது என்று கூறினாரா அல்லது புதிதாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தாரா என்று தெரியவில்லை.
அவர் தனது விண்ணப்பத்தில் எந்த பாஸ்போர்ட் எண்ணை குறிப்பிட்டார், இந்த பாஸ்போர்ட் எப்படி சரிபார்த்து அவருக்கு அளிக்கப்பட்டது என்ற கேள்விகள் எழுகிறது. இன்டர்போலால் தேடப்படும் ஒரு குற்றவாளிக்கு எப்படி பாஸ்போர்ட் கிடைத்தது? சாதாரண மக்கள் அனைத்து ஆவணங்களும் வைத்திருந்தாலும் பாஸ்போர்ட் பெற அல்லாடுகிறார்கள். ஆனால் ஒரு குற்றவாளியான சோட்டா ராஜன் போலி ஆவணங்களை அளித்து எளிதில் பாஸ்போர்ட் பெற்றுள்ளார் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாஸ்போர்ட் சட்டம் 1967ன் படி சிபிஐயின் இன்டர்போல் பிரிவு அல்லது பாஸ்போர்ட் வழங்கும் அதிகாரிகள் போலி ஆவணங்களை சமர்பித்து ஆள்மாறாட்டம் செய்து பாஸ்போர்ட் பெற்றதற்காக ராஜன் மீது வழக்குப்பதிவு செய்யலாம். இது குறித்த வழக்கு டெல்லியில் பதிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. யாருடைய உதவியும் இன்றி வெளிநாட்டில் இந்திய பாஸ்போர்ட் பெற முடியாது. ராஜன் விஷயத்தில் தீவிர விசாரணை தேவை என்று ஐபிஎஸ் அதிகாரி யோகேஷ் பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் இந்திய பாஸ்போர்ட் பெற ஒருவர் தனது கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என்ற சட்டம் அண்மையில் கொண்டு வரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.