பெங்களூர் நடைபாதையில் அழகுக்கு வைத்த கிரானைட் கற்கள் அபேஸ்!
பெங்களூர்: ஐடி துறை தலைநகரான பெங்களூரின் முக்கியமான எம்.ஜி ரோட்டில் பொருத்தப்பட்ட கிரானைட் அழகு கற்கள் அபேஸ் செய்யப்பட்டுள்ளன.
பெங்களூரின் இதயபகுதியே எம்.ஜி.ரோடு. இயல்பாகவே மிகவும் ராயல் லுக்கில் காட்சியளிக்கும் 2.5 கி.மீ நீளமுள்ள இந்த பகுதி மெட்ரோ ரயில் வருகைக்கு பிறகு மெருகேறியுள்ளது. இதை மேலும் உலக தரத்துக்கு உயர்ந்தும் நோக்கத்தில் அழகுக்காக, எம்ஜி சாலையை ஒட்டிய செயின்ட் மார்க்ஸ் ரோடு மற்றும் நடைபாதையில் கிரானைட் கற்கள் நடப்பட்டன. மொத்தம் ரூ.100 கோடி செலவில் அழகுபடுத்தப்பட்ட அந்த பகுதி, வரும் 26ம்தேதி முறைப்படி, திறந்து வைக்கப்படுவதாக இருந்தது.
நடைபாதையில் பொருத்தப்பட்ட கற்கள் 3 அடி உயரம் கொண்டவை. ஒரு கல்லின் விலையே ரூ.6,500 ஆகும். இதை நிறுவிய சில நாட்களிலேயே 30 கற்கள் மாயமாகியுள்ளன. அதிர்ச்சியடைந்த மாநகராட்சி நிர்வாகிகள் மாற்றாக விலை குறைந்த கற்களை பொருத்த தொடங்கியுள்ளனர்.
சொந்த வீடு கூட இல்லாமல் பல கோடி மக்கள், வறுமையில் உழலும் ஒரு நாட்டில் அழகு கற்களுக்கு கோடிக் கணக்கில் செலவிட்ட மாநகராட்சி, அதை பாதுகாக்க சிசிடிவி போன்ற உபகரணங்களை போலீஸ் உதவியுடன் பொருத்தாதது வேதனை. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்யும் கதையாய், தற்போது, சிசிடிவி கேமரா பொருத்த முனைப்பு காட்டப்படுகிறது.