மோடி கேபினட்: சிவசேனா எம்.பி. அனில் ஏன் டெல்லி ஏர்போர்ட்டோடு மும்பை திரும்பினார்?
டெல்லி: சிவசேனா எம்.பி. அனில் தேசாய் மோடி அமைச்சரவையில் சேர டெல்லிக்கு சென்று விமான நிலையத்தோடு மும்பைக்கு திரும்பியுள்ளார்.
பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை தனது அமைச்சரவையை விரிவுபடுத்தினார். அதில் சிவசேனா பரிந்துரைத்த எம்.பி. அனில் தேசாய்க்கு பதில் அந்த கட்சியைச் சேர்ந்த சுரேஷ் பிரபுவுக்கு மோடி கேபினட் அமைச்சர் பதவி அளித்தார்.
கேபினட் பதவி தொடர்பான பாஜக-சிவசேனா இடையேயான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாததால் சனிக்கிழமை இரவு வரை அனில் தேசாய் மும்பையில் இருந்து டெல்லிக்கு கிளம்புவதாக இல்லை. இந்நிலையில் தான் பாஜக தலைவர் அமித் ஷா சனிக்கிழமை இரவு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு போன் செய்து 2 கேபினட் மற்றும் 1 இணை அமைச்சர் பதவி அளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.
இதையடுத்து அனில் தனது மனைவியுடன் ஞாயிற்றுக்கிழமை காலை டெல்லிக்கு கிம்பினார். ஆனால் டெல்லி விமான நிலையத்தில் இறங்கிய அவரை உடனே மும்பை வருமாறு உத்தவ் தெரிவித்தார். அவரும் மும்பைக்கு கிளம்பிவிட்டார்.
தாங்கள் பரிந்துரைக்காத சுரேஷ் பிரபவுக்கு பதவி அளிக்கப்பட்டது உத்தவ் தாக்கரேவை கோபம் அடைய வைத்துள்ளது. மேலும் சுரேஷ் சிவசேனாவில் இருந்து விலகி பாஜகவில் சேர்வது யாருக்கும் தெரியாமல் கடைசி நிமிடம் வரை ரகசியமாக வைக்கப்பட்டதும் அவருடைய கோபத்தை அதிகரித்துள்ளது.
ஏற்கனவே மகாராஷ்டிரா சட்டசபை விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ள நிலையில் இந்த சம்பவம் சிவசேனாவை அதிருப்தி அடைய வைத்துள்ளது.