"வாழ்க்கையே போச்சு.. நேபாள் மீது கேஸ் போட போறேன்.." உலகை அலறவிட்ட பிகினி கில்லர்! ரிலீசான உடனே பரபர
காத்மாண்டு: உலகின் மிக கொடூரமான கொலைகாரர்களில் ஒருவராகக் கருதப்படும் பிரெஞ்சு கொலைகாரன் பிகினி கில்லர் சார்லஸ் சோப்ராஜ் நேபாள சிறையில் இருந்து விடுதலையாகியுள்ளார். பலர் மீது வழக்கு தொடர உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 1970களில் தொடங்கிப் பல ஆண்டுகள் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியவர் சீரியல் கில்லர் சார்லஸ் சோப்ராஜ். சுமார் 15 ஆண்டுகள் யாரிடமும் பிடிபடாமல் சார்லஸ் சோப்ராஜ் தனது கொடூர சம்பவங்களைத் தொடர்ந்து கொண்டே வந்தார்.
இறுதியில் போலீசாரிடம் சிக்கிக் கொண்ட போதிலும், தான் எதுவுமே செய்யாத அப்பாவி என்பது போலவே தொடர்ந்து நடித்து வருகிறார் இந்த சார்லஸ் சோப்ராஜ். இப்போது இவர் நேபாளத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

நேபாள் மீது வழக்கு
இது தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "இப்போது தான் நன்றாக இருக்கிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு நான் மீண்டும் சுதந்திர காற்றைச் சுவாசிக்கிறேன். வெளியே வந்த பிறகு இப்போது எனக்கு நிறைய வேலைகள் இருக்கிறது. நேபாள அரசு உட்பட பலரது மீதும் கேஸ் போடப் போகிறேன். நான் நேபாளத்திற்கு வந்தது கூட இல்லை. ஆனால், என்னைக் கொலைகாரன் என்று கூறி இத்தனை ஆண்டுகள் சிறையில் இருக்க வைத்துவிட்டனர். அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்வேன். இப்போது நான் எனது குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்கப் போகிறேன்" என்றார்.

யார் இவர்
இந்தியத் தந்தைக்கும் வியட்நாம் தாய்க்கும் பிறந்தவர் தான் சார்லஸ் சோப்ராஜ். குடும்ப சூழல் காரணமாகச் சிறுவயதிலேயே அவர்கள் பிரான்ஸ் சென்றுள்ளனர். அங்குத் தாய் தந்தை கவனிப்பு இல்லாததால், சிறு வயதில் இருந்தே திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடத் தொடங்கினார் சார்லஸ் சோப்ராஜ். இதற்காக 19 வயதிலேயே சார்லஸ் சோப்ராஜ், பிரான்ஸ் சிறைகளில் கம்பி எண்ணியுள்ளார். அதன் பிறகு சிறையில் இருந்து ரிலீசான பிறகும் அதையே தொடர்ந்துள்ளார். இதையடுத்து பிரான்ஸ் போலீஸ் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது.

இந்தியாவில் கைவரிசை
கைதில் இருந்து தப்பிக்கப் போலி பாஸ்போர்ட் மூலம் மும்பை வந்துள்ளார். இங்கும் கூட ஹோட்டல் அசோகாவில் கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் கைதானார். அதன் பிறகு ஜாமீன் பெற்று கொலைகளைச் செய்யத் தொடங்கினார். பெரும்பாலும், மேற்குலக நாடுகளைச் சேர்ந்த பெண்களே இவரது குறி.. தன்னை ரத்தின கல் வியாபாரி போலக் காட்டிக் கொள்ளும் சோப்ராஜ், அவர்களிடம் நட்பாகப் பழகுவாராம். அதன் பிறகு, அவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து, கொள்ளையடித்து அவர்களைக் கொடூரமாகக் கொலை செய்து விடுவதையே வாடிக்கையாக வைத்திருந்தார்.

பிகினி கில்லர்
சொகுசாகவே வாழப் பழகிய சோப்ராஜ், தொடர்ந்து கொடூர கொலைகளைச் செய்தார். கடந்த 1975ஆம் தாய்லாந்து கடற்கரையில் பிகினி அணிந்த இளம் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அதன் பிறகும் பல்வேறு உடல்கள் இப்படிக் கண்டுபிடிக்கப்பட்டன. பெரும்பாலும் அடித்து, கழுத்தை நெரித்தே அவர்கள் கொலை செய்யப்பட்டிருந்தனர். அதன் பிறகே "பிகினி கில்லர்" என்ற பெயரை சோப்ராஜ் பெற்றார். உலகெங்கும் சுமார் 10க்கும் மேற்பட்ட நாடுகளில் 20க்கும் மேற்பட்ட கொலைகளில் இவர் குற்றஞ்சாட்டப்படுகிறார்.

இந்தியாவில் சிறை
அவர் 1976இல் இந்தியாவில் கைது செய்யப்பட்டார்.. அவருக்கு இறுதியில் 21 ஆண்டுகள் ஜெயில் தண்டனை கொடுக்கப்பட்டது. 10 ஆண்டுகளை சிறையில் கழித்த நிலையில், சிறை அதிகாரிகளுக்கு பார்ட்டி நடத்துவதாகச் சொல்லி சிறை கைதிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து அங்கிருந்து தப்பியுள்ளார். இருப்பினும், கொஞ்ச நாட்களிலேயே கோவாவில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்து தப்பிக்க முயன்ற குற்றத்திற்காக அவருக்கு மேலும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அதிகரிக்கப்பட்டது.

நேபாளத்தில் சிக்கியது எப்படி
2003இல் ஒரு வழியாக விடுதலையான அவர், பிரான்ஸ் நாட்டிற்குச் சென்று அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். இதற்கிடையே 2003இல் நேபாளம் வந்த சேப்ராஜ், போலி பெயரில் சால்வை ஏற்றுமதி நிறுவனத்தைத் தொடங்கினார். இருப்பினும், 1975ஆம் ஆண்டு இரு சுற்றுலாப் பயணிகளைக் கொலை செய்த குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு மீண்டும் சிறையில் வாழ்க்கையைக் கழித்து வந்தார். இப்போது சுமார் 20 ஆண்டுகள் கழித்து உடல்நிலை காரணமாக அவர் நேபாள சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications