Exclusive: ராஜிவ் காந்தி கொலையும், இந்திய உளவு அமைப்பின் பித்தலாட்டமும்.. சிபிஐ அதிகாரி பரபர பேட்டி
டெல்லி: விடுதலை புலிகள் ராஜிவ்காந்தியை கொலை செய்யவில்லை என நம்ப வைக்க இந்திய உளவு அமைப்புகள் பெரும்பாடுபட்டதாக அக்கொலை வழக்கை விசாரித்த சிபிஐ மூத்த அதிகாரி கே.ரகோத்தமன் தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரி ரகோத்தமன் 'ஒன்இந்தியாவிடம்' பேசுகையில் கூறியதாவது:
ராஜிவ்காந்திக்கு வழங்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பு (SPG) விலக்கி கொள்ளப்பட்டு டெல்லி காவல்துறை பாதுகாப்பின்கீழ் அவர் கொண்டுவரப்பட்டார். ஆனால் அந்த காலகட்டம் என்பது, அவருக்கு எதிராக அச்சுறுத்தல்கள் அதிகம் இருந்த காலகட்டமாகும்.

எச்சரிக்கை
சர்வதேச உளவு அமைப்புகள் ராஜிவ்காந்தி உயிருக்கு ஆபத்து இருப்பதாக இந்தியாவுக்கு எச்சரிக்கைவிடுத்தன. பாலஸ்தீனும் இதை கூறியிருந்தது. இன்னும் சொல்லப்போனால் அச்சுறுத்தல் என்பது அபாயகர எல்லையை தாண்டியிருந்தது.

உடனடியாக கொலை
1991ம் ஆண்டு மே 20ம் தேதி, மத்திய அமைச்சரவை ராஜிவ் காந்திக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கிறது. ஆனால் மறுநாளே ராஜிவ்காந்தி கொல்லப்பட்டார்.

தாமதம்
ராஜிவ்காந்திக்கு ஆபத்து அதிகம் இருப்பதாக தகவல்கள் கிடைத்த பிறகும், பாதுகாப்பு விவகாரத்தில் முடிவெடுக்க ஏன் அவ்வளவு தாமதம் செய்யப்பட்டது? பணியில் அவ்வளவு அலட்சியம் இருந்துள்ளதே இதற்கு காரணம்.

வீடியோ இல்லை
ராஜிவ்காந்தி அவர் கொல்லப்படும் ஸ்ரீபெரும்புதூருக்கு வருவதற்கு முன்பு வீடியோ எடுக்கப்பட்டது. அந்த வீடியோ இப்போது எங்கே? உளவுத்துறை இயக்குநர் அந்த வீடியோவை பறிமுதல் செய்திருந்தார். அந்த வீடியோ இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை. இந்த வீடியோ ஆதாரத்தை தெரிந்தே மறைத்துள்ளனர் என்றார் அவர்.

தானு வீடியோ
மற்றொரு மூத்த அதிகாரி கூறுகையில், அந்த வீடியோ முக்கியத்துவம் வாய்ந்தது. தனு மற்றும் தற்கொலை படை (suicide bomber) நபரின் வீடியோ அதில் பதிவாகியிருந்தது. உண்மையை சொல்ல வேண்டுமானால், பத்திரிகையாளர்கள் கொடுத்த ஆதாரங்கள்தான் வழக்கை முன்நகர்த்த உதவின. உளவுத்துறையால் அல்ல.

விடுதலை புலிகள் செய்யவில்லை
ராஜிவ் கொலைக்கு பிறகு, இந்திய உளவு அமைப்பு ரா தலைவர் கூறுகையில், எல்டிடிஇ இக்கொலையை செய்யவில்லை என கூறியிருந்தார். ஆனால் சிறப்பு விசாரணை அமைப்பு மே 30ம் தேதிவாக்கில் இந்த கொலையில் விடுதலை புலிகளுக்கு தொடர்புள்ளதாக தடயங்கள் கிடைத்த தகவலை கூறியது. அதை ரா தலைவருக்கும் தெரியப்படுத்தியது.

ரா அமைப்பின் பிடிவாதம்
ஆனால் ரா தலைவரோ, அதை ஏற்கவில்லை. அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏதான் ராஜிவ் கொலைக்கு காரணம் என்று தெரிவித்தார். ரா அமைப்பு விசாரணையின் போக்கை திசை மாற்றும் வகையில் சி.ஐ.ஏ பற்றி பொய் தகவல்களை வெளியிட்டபடி இருந்தது. அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்திலேயே சி.ஐ.ஏதான் ராஜிவ் கொலைக்கு காரணம் என கூறியிருந்தார்.

உடந்தையா
இதை வைத்து பார்க்கும்போது ரா மற்றும் இந்திய உளவுத்துறை ஆகியவை இணைந்துதான் ராஜிவ் கொலை குற்றத்திற்கு உடந்தையாக இருந்துள்ளன என்று சந்தேகிக்க தோன்றுகிறது என்றார் அந்த அதிகாரி.

கிட்டுவை தேடினோம்
ரகோத்தமன் மேலும் கூறுகையில், விசாரணையின்போது ரா அமைப்பு எங்களுக்கு உதவவில்லை. லண்டனை சேர்ந்த விடுதலை புலிகள் நிர்வாகி கிட்டுவை நாங்கள் கைது செய்ய முயன்றபோது, இங்கிலாந்து அரசு அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. நாங்கள் அவரை கைது செய்ய முயன்றபோது ரா அமைப்போ, கிட்டுவை கொல்ல முடிவு செய்திருந்தது. கிட்டுதான், சர்வதேச விவகாரங்களில் பிரபாகரனுக்கு உதவியாக இருந்தவர்.

வர்மா கமிஷன்
வர்மா கமிஷன் தனது அறிக்கையில், இந்திய உளவுத்துறையின் மெத்தனங்களை பட்டியலிட்ட பிறகு நாடாளுமன்றம், உரிய விசாரணைகளை முடுக்கிவிட்டது. அதுவரை வழக்கின் சிறு ஆவணங்கள் கூட யாருக்கும் தெரியாமல்தான் இருந்தது. இக்கொலையில் ஒற்றைக்கண் சீனிவாசன் முக்கிய குற்றவாளி, அவர் பெங்களூர் கோனனகுண்டே பகுதியில் பதுங்கியுள்ளார் என்பது தெரியவந்தது. இதை தாமதமாகத்தான் உளவுத்துறை சிபிஐக்கு தெரிவித்தது. உளவு அமைப்புகளுக்கு புலிகளின் சயணைடு கலாசாரம் நன்கு தெரியும். இவ்வாறு ரகோத்தமன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications