அதிமுகவை கைப்பற்ற பெங்களூருவில் அரங்கேறுகிறதா "அரண்மனை சதி"?
பெங்களூர்/சென்னை: சிறையில் இருக்கும் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா யாரையுமே சந்திக்காத நிலையில் பெங்களூருக்கு சசிகலா தரப்பினர் சென்று வருவதன் பின்னணி குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெயலலிதாவின் தோழி சசிகலா என்பதால் அவரது உறவினர்கள் அனைவரும் அதிமுகவில் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கப்படுகின்றனர். அதிமுகவுக்கு நெருக்கடி என்ற நேரத்தில் இவர்கள் வெளியேற்றப்படுவதும் பின்னர் இணைந்து கொள்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.
ஜெயலலிதாவை சுற்றி இந்த மன்னார்குடி குழு இருக்கக் கூடாது என்பதற்கான ஒரு லாபியும் அவ்வப்போது தீவிரமாக செயல்படுவது வழக்கம். ஜெயல்லிதாவை விட்டு சசிகலா தரப்பு விலகி நிற்கும் போது இந்த லாபியிஸ்டுகள் உள்ளே போவதும் சசிகலா தரப்பு போயஸ் தோட்டம் சென்றவுடன் அவர்கள் வெளியேறுவதும் நாடு கண்ட காட்சிகள்.
யாரையும் சந்திக்காத ஜெ.
தற்போது சிறையில் இருக்கும் ஜெயலலிதா எந்த ஒரு அதிகாரியையும் அதிமுகவினரையும் சந்திக்க விரும்பவில்லை. இதற்கு பல காரணங்களும் கூறப்படுகின்றன.
உத்தரவிடும் சசிகலா
அதே நேரத்தில் சிறையில் இருந்தபடி அனைத்து முடிவுகளையுமே ஜெ. இடத்தில் நின்று சசிகலாதான் உத்தரவிட்டு வருகிறார். இந் நிலையில் மன்னார்குடி குழு பெங்களூர் ஹோட்டல்களில் முகாமிட்டுள்ளது. இளவரசியின் மகன் விவேக், மருமகன்கள் கார்த்திகேயன், ராஜராஜன், டி.டி.வி தினகரனின் சகலையான டாக்டர் சிவக்குமார் ஆகியோர் பெங்களூரிலேயே தங்கியுள்ளனர்.
வேறு முதல்வர்?
ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட போதே ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதிலாக வேறொருவரை முதல்வராக்க வேண்டும் என்று மன்னார்குடி குழு முயற்சித்தும் பார்த்ததாம். ஆனாலும் ஜெயலலிதா உறுதியாக இருந்திருக்கிறார்.
அதிமுகவினர் சந்தேகம்
அதே நேரத்தில் இப்போது சசிகலா மூலமாக பிறப்பிக்கப்படும் கட்டளைகள் உண்மையிலேயே "ஜெயலலிதா"வுக்கு தெரிந்துதான் பிறப்பிக்கப்படுகிறதா? அல்லது இவர்களது சொந்த கட்டளைகள்தானா? என்ற சந்தேகமும் அதிமுகவினருக்கு இருக்கிறது. மேலும் நடராஜன் உள்ளிட்ட சசிகலா தரப்பினர் பெங்களூரில் வந்து முகாமிடுவதும் அதிகரித்து வருகிறது.
சதித் திட்டம்?
கடந்த முறை சசிகலா உட்பட மன்னார்குடி குழுவே ஒட்டுமொத்த போயஸ் தோட்டத்தை விட்டும் அதிமுகவை விட்டும் மாதக் கணக்கில் விலக்கி வைக்கப்பட்டதற்கு காரணமே, பெங்களூர் வழக்கு விசாரணையின் போதே ஜெயலலிதாவுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டினார்கள் என்ற தகவலால்தான்.
அச்சத்தில் அதிமுக
இதனால் இந்த உத்தரவுகளை ஏற்று செயல்படப் போய் நாளை ஜாமீனில் வெளியே வரும் ஜெயலலிதா தங்கள் மீதும் அதிருப்தியோ கோபத்தையோ வெளிப்படுத்திவிடுவாரோ என்ற அச்சமும் அதிமுகவினரிடத்தில் ஏற்பட்டுள்ளது.