போராடும் மக்கள் மீது போடப்படும் வழக்குகளை திரும்பப் பெறுவதில் கர்நாடகாவை பின்பற்றுமா தமிழக அரசு?
போராடும் மக்கள் மீது போடப்படும் வழக்குகளை திரும்பப் பெறுவதில் கர்நாடகாவை பின்பற்றுமா தமிழக அரசு என்ற கேள்வி எழுந்துள்ளது.
பெங்களூரு : கர்நாடகாவில் தனிக்கொடி கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்ற அந்த மாநில முதல்வர் அறிவித்துள்ளார், இதே போன்று தமிழகத்திலும் மக்கள் பிரச்னைக்காக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படுமா.
கர்நாடகாவில் தனிக்கொடி கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று அந்த மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். தேசியக் கொடியை அவமதிக்கவில்லை என்றும், கர்நாடகாவிற்கென்று தனியாக ஒரு கொடி வேண்டும் என்பது தான் தன்னுடைய விருப்பம் என்றும் அவர் கூறியள்ளார்.
பெங்களூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தனிக்கொடி கோரி போராடிய கன்னட அமைப்பினர் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறப்படும். மாநிலத்தின் மொழி, மண், நீர் உள்ளிட்டவைகளுக்காக போராடிய அவர்களுக்கு நன்றி என்றார் சித்தராமையா. மக்களின் உணர்வகளுக்கு மதிப்பளிக்கும் முதல்வர் என்று சித்தராமையா வெளிக்காட்டியுள்ளார்.
முதல்வரின் கருத்தால் விமர்சனம்
சித்தராமையாவின் இந்தச் செயலை தமிழக அரசு முன் மாதிரியாக எடுக்குமா. டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராக பெண்கள், குழந்தைகள் போராடியது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியதற்கு அவர்கள் பேஷனுக்காக நடத்தும் போராட்டம் இது என்று சட்டசபையிலேயே கூறினார் முதல்வர். டாஸ்மாக் கடைகளால் பாதுகாப்பு கேள்விக் குறியாவதோடு, பலரின் வாழ்க்கை நாசமாகிறது என்பதற்காகவே மக்கள் போராட்டத்தில் குதித்தனர் ஆனால் அதை முதல்வர் கேலி செய்து கூறிய கருத்து விமர்சனத்திற்கு உள்ளானது.
போராட்டக்காரர்கள் மீது குண்டர்சட்டம்
இதனைத் தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் அனுமதியின்றி இலங்கைத் தமிழர்களுக்கான நினைவேந்தல் கூட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. மீத்தேன்,ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு திட்டங்களுக்கு எதிராகக் போராடிய மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம் போட்டது என்பன உள்ளிட்ட அடக்குமுறைகளால் மக்கள் கடும் கோபமடைந்தனர்.
வழக்குகள் திரும்பப் பெறப்படுமா?
இந்நிலையில் இவர்கள் இரண்டு பேரும் தற்போது நீதிமன்ற உத்தரவின் பேரில் வெளியே வந்துள்ளனர். ஆனால் ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்காது என்று கூறி வரும் நிலையில் அதற்காகப் போராடிய மாணவி வளர்மதி மீதும், சமூக ஆர்வலர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் மீதும் போடப்பட்ட வழக்குகளை அரசு திரும்பப் பெறுமா.
மக்கள் எதிர்பார்ப்பு
மக்களுக்காகத் தான் அரசு என்பது போல கர்நாடக முதல்வர் கன்னட அமைப்பினர் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று கூறியது போல தமிழக அரசும் செய்யுமா. இதைத் தான் மக்கள் தமிழக முதல்வர் பழனிச்சாமியிடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள்.