சந்திக்க மறுத்து ரோட்டில் நிறுத்திய மோடி.. என்ன செய்யப்போகிறது நாட்டின் 3வது பெரிய கட்சி?
டெல்லி: நாட்டின் 3வது பெரிய கட்சியான அதிமுக எம்.பிக்களுக்கே சந்திக்க, அனுமதி கொடுக்க மறுத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
தமிழகத்தில் 2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில், மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 37 இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது. பா.ஜ.க., பா.ம.க. ஆகியவை தலா ஒரு இடத்தை பிடித்தன.
லோக்சபாவில் அதிமுகவுக்கு 37 எம்.பி.க்கள் உள்ள நிலையில், கடந்த ஆண்டில் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக 134 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. மாநில சட்டசபையில் கட்சிகளுக்கு உள்ள எம்.எல்.ஏ.க்கள் அடிப்படையில் ராஜ்யசபாவுக்கு எம்.பி.க்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
'Delhi: AIADMK MPs march towards PMO over #CauveryIssue pic.twitter.com/uVvLOTGH0D
— ANI (@ANI_news) October 4, 2016
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் அடிப்படையில் அ.தி.மு.க.வுக்கு 4 மேல்-சபை எம்.பி.யை தேர்வு செய்ய பலம் கிடைத்தது. இதன் மூலம் ராஜ்யசபா அ.தி.மு.க. எம்.பி.க்களின் பலம் 13 ஆனது. எனவே, நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்களின் பலம் 50 ஆக உயர்ந்துள்ளது.
இதன் மூலம், நாட்டிலேயே 3-வது பெரிய கட்சி என்ற அந்தஸ்தும் அ.தி.மு.க.வுக்கு கிடைத்துள்ளது. நாடாளுமன்றத்தில், மக்களவை, மாநிலங்களவையை சேர்த்து, பா.ஜ.க.வுக்கு 331 எம்.பி.க்களும், காங்கிரஸ் கட்சிக்கு 108 எம்.பி.க்களும் உள்ளனர். 3வது இடத்தை அ.தி.மு.க. பிடித்துள்ளது.
அதேநேரம், ராஜ்யசபா அதிமுக எம்பி, சசிகலா புஷ்பா சமீபத்தில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால் அதிமுக பலம் 49-ஆக உள்ளது. இருப்பினும், அக்கட்சியே 3வது பெரிய கட்சியாகும். ஏனெனில், 4வது இடத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு, இரு அவைகளிலும், சேர்த்து, 46 எம்.பி.க்கள் உள்ளனர்.
எம்.பி.க்கள் பலத்தில் 3-வது இடத்தை அ.தி.மு.க. பிடித்துள்ளதால், பாராளுமன்றத்தில் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்ற அ.தி.மு.க.வின் ஆதரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இப்படி ஒரு சூழ்நிலையில்தான், காவிரி விவகாரம் குறித்து பேசுவதற்கு, அதிமுக எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி அனுமதி மறுத்துள்ளார்.
இத்தனைக்கும், அதிமுக தலைமைக்கு மோடி மிகவும் நெருக்கமானவர். சொத்துக்குவிப்பு வழக்கு இழுபறியில் இருந்தபோதே, ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சென்று சந்தித்து நலம் விசாரித்தவர் மோடி. ஆனால், இன்றோ ஜெயலலிதா தலைமையிலான கட்சி எம்.பிக்களுக்கு தன்னை சந்திக்க நேரம் ஒதுக்க மறது்துள்ளார்.
இதற்கு அதிமுக நாடாளுமன்றத்தில் எதிர்வினையாற்றுமா என்பதே இப்போது எஞ்சியுள்ள கேள்வி. அதிமுக நினைத்தால் நாடாளுமன்ற நடவடிக்கைகளை முற்றிலுமாக நிறுத்த முடியும். காவிரி விவகாரத்திற்காக அடுத்த கூட்டத்தொடரில்தான் அதிமுக தனது எதிர்ப்பை காண்பிக்க வேண்டும் என்றில்லை. இப்போதும் டெல்லியில் தொடர் போராட்டங்களை நடத்துவதன் மூலம், தேசத்தின் கவனத்தை அக்கட்சி எளிதாக ஈர்க்க முடியும்.
கர்நாடகா இப்படித்தான் செய்தது. கர்நாடக முதல்வர் சித்தராமையா எத்தனையோ முறை முயன்றும்கூட, காவிரிக்காக எனில் நான் சந்திக்க நேரம் தர மாட்டேன் என கூறிவிட்டார் பிரதமர் மோடி. இதன்பிறகு பிரதமர் அலுவலகத்திற்கு வெளியே, அரசியல் காய் நகர்த்தல்களை ஆரம்பித்தது கர்நாடகா. பாஜக சார்பில் 17 லோக்சபா எம்.பிக்கள் கர்நாடகாவிலிருந்து தேர்வாகியுள்ளனர். அவர்களால் மோடிக்கு எதிராக வாய் திறக்க முடியவில்லை. ஆனால், பிற கட்சிகள் அரசுடன் ஒருங்கிணைத்து மோடிக்கு நெருக்கடி கொடுப்பதில் வெற்றி பெற்றன.
முன்னாள் பிரதமர் தேவகவுடா உண்ணா விரதம் இருந்ததோடு, பிரதமரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு காவிரி குறித்து பேசியுள்ளார். நீர்வள அமைச்சர் உமா பாரதியை, கர்நாடக பாஜக அமைச்சர்கள் சந்தித்து, மோடிக்கு வெளியில் இருந்து நெருக்கடியை அதிகரித்தனர். வெற்றியும் பெற்றனர். இப்போது அதிமுகவினரும் அதே போன்ற நெருக்கடியை கையில் எடுக்க ஆயத்தமாக வேண்டிய காலம் இது. கட்சி வேறுபாடை மறந்து தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டிய காலகட்டமும் இதுவாகும்.