6 மத்திய பல்கலைக்கழகங்களில் யோகாவுக்கென தனி துறை! - ஸ்மிருதி இரானி
டெல்லி: நாட்டிலுள்ள 6 மத்திய பல்கலைக் கழகங்களில் யோகாவுக்கென தனித் துறை உருவாக்கப்படும் என மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறினார்.
டெல்லியில் தேசியக் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் இதைத் தெரிவித்தார். அவர் மேலும் பேசியதாவது:
"ஆசிரியர்களும், பெற்றோர்களும் குழந்தைகளோடு இணைந்து யோகாசனப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
மிகவும் பழைமை வாய்ந்த யோகக் கலையானது, நமது உடல் இயக்கங்களை மேம்படுத்தவும், பார்வை-இயக்கம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கவும் பயன்படுகிறது. எனவே, ஆசிரியர்களும், பெற்றோர்களும் குழந்தைகளுடன் சேர்ந்து யோகாசனப் பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
இந்த கல்வியாண்டில், 6 மத்தியப் பல்கலைக் கழகங்களில் யோகாசனப் பயிற்சிக்கென தனியாக ஒரு துறை உருவாக்கப்படும்," என்றார் ஸ்மிருதி இரானி.
நிகழ்ச்சியில், மாற்றுத் திறனாளிகள் உள்பட 21 மாநிலங்களைச் சேர்ந்த 300 மாணவர்கள் கலந்து கொண்டு, யோகாசனப் பயிற்சியில் ஈடுபட்டனர்.